districts

img

உடல் உறுப்புகளை தனியார் மருத்துவமனை திருடுவதாக குற்றச்சாட்டு; சமூக ஜனநாயக இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்..!

கோவையில் உள்ள தனியார் மருத்துவமனை உடல் உறுப்புகளை திருடுவதாக கூறி பாதிக்கப்பட்ட பெண் காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்தார். மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சமூக ஜனநாயக அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உடுமலைப்பேட்டயை சேர்ந்தவர் பிரவீனா. இவர் வெள்ளியன்று கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

 இதுகுறித்து அவர் கூறுகையில், எனது அம்மாவிற்கு கடந்த ஏப்ரல் மாதம் காய்ச்சல் இருந்ததால்  போத்தனூரில் உள்ள ஃபிம்ஸ் மருத்துவமனையில் கடந்த ஏப்ரல் மாதம் அனுமதித்தோம். மே மாதம் வரை அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. எனது அம்மாவின் உடல் நலன் குறித்து எந்த தகவலும் கொடுக்காமல் ஒரு நாளைக்கு ரூ.70 ஆயிரம் வரை கட்டணத்தை செலுத்துமாரு மருத்துவமனை நிர்வாகம் கூறியது.

கடந்த மே மாதம் 3ம் தேதி எனது அம்மாவை கிணத்துக்கடவு அருகே உள்ள முத்துக்கவுண்டன் புதூரில் உள்ள பண்ணைக்கு அழைத்துச் சென்றனர். இதே போல் சில நோயாளிகளையும் அழைத்துச் சென்றனர். அடுத்த நாள் எனது அம்மா இறந்துவிட்டர். காரணம் இல்லாமல் எனது அம்மாவை  வேறுஇடத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். உடல் உறுப்புகளை திருடுவதற்காக வேறு இடத்திற்கு கொண்டு சென்றதாக மருத்துவமனையில் உள்ள சிலர் எங்களிடம் ரகசியாமாக தெரிவித்தனர்.

 மேலும் எனது தாயின் நகையும் காணாமல் போயிருந்தது. இது குறித்து கேள்விகேட்ட என்னை மருத்துவமனை நிர்வாகம் மிரட்டி எனது செல்போனை உடைத்தனர். பின்னர் போத்தனூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று என் மீது வழக்கு பதிவு செய்வதாக மிரட்டியதோடு, என்னிடம் இருந்த ஆதாரங்களை அங்கிருந்த போலீசார் அழித்துவிட்டனர். பின்னர் மருத்துவமனை நிர்வாகத்தினர் காவல் நிலையம் வந்து, எங்களை கொலை செய்வதாக மிரட்டினர். இதுகுறித்து போலீசாரிடமும், சுகாதாரத்துறையிடமும் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. உடல் உறுப்பு திருட்டு நடக்கும் இந்த மருத்துவமனை மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

 இதனிடையே ஃபிம்ஸ் மருத்துவமனையில் பல்வேறு சட்ட விரோத செயல்கள் நடப்பதாக கூறி அனைத்து ஜனநாயக அமைப்புகள் சார்பில் கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தபெதிக பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜோ.இலக்கியன், ஆதித்தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் ரவிக்குமார், திவிக நேருதாஸ், மக்கள் அதிகாரம் மூர்த்தி உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.