districts

img

கோவை: தீப்பிடித்து எரிந்த அரசு பேருந்து

சேலத்தில் இருந்து கோவை நோக்கி வந்த அரசு பேருந்து  கருமத்தம்பட்டி அருகே வந்தபோது திடீரென தீ விபத்து ஏற்பட்டது. நல்வாய்ப்பாக பேருந்தில் பயணித்த அனைவரும் உயிர் தப்பினர்.

சேலத்தில் இருந்து இன்று மதியம் கிளம்பிய அரசு பேருந்து ஒன்று, 67 பயணிகளுடன் கோவை நோக்கி வந்தபோது கருமத்தம்பட்டி அருகே திடீரென பேருந்தின் முன்பக்கத்தில் கரும்புகை வெளியேறியுள்ளது.

கரும்புகை பேருந்து முழுவதும் பரவிய நிலையில் பயணிகள் அதிர்ச்சிக்கு உள்ளாகி அலறினர். அப்போது சாதுரியமாக  செயல்பட்ட ஓட்டுநர் சிவக்குமார், உடனடியாக சாலையோரத்தில் பேருந்தை நிறுத்தினார். உடனடியாக பேருந்தில் இருந்த பயணிகள் அலறியடித்துக் கொண்டு வெளியேறினர்‌.  நல்வாய்ப்பாக பேருந்தில் பயணித்த அனைவரும் காயங்கள் ஏதுமின்றி உயிர் தப்பினர். கண்ணிமைக்கும் நேரத்தில் பேருந்து முழுவதும் தீ மளமளவென பரவியதால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.  சாலையில் பயணித்த சக வாகன ஓட்டிகள் உடனடியாக தீயணைப்பு துறை மற்றும் போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த சூலூர் தீயணைப்பு துறை வீரர்கள் தீயை சுமார் ஒரு மணி நேரம் போராடி கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

கருமத்தம்பட்டி போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணையை முன்னெடுத்துள்ளனர். முன்னதாக மாற்று பேருந்து வரவழைக்கப்பட்டு பயணிகள் கோவைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து காரணமாக கருமத்தம்பட்டி பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும், இந்த விபத்து தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.