சேலம், அக்.23- தொழிலாளியின் வீட்டைச் சுற்றிலும் கம்பி வேலி அமைத்து வெளியே வரமுடியாமல் செய்த தால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாவட்டம், மகுடஞ் சாவடி அருகே உள்ள தப்பக் குட்டை கிராமம், சின்ன மாரியம் மன் கோயில், அருந்ததியர் தெரு, நத்தம் புறம்போக்கு நிலத்தில் உளியன் மகன் நரசப்பன் என்பவர் தொகுப்பு வீடு திட்டத்தில் வீடு கட்டி குடியிருந்து வருகிறார். இவரது வீட்டின் முன் பகுதியை கட்டடம் கட்டி நீட்டிப்பு செய்த காரணத்தால் அப்பகுதியில் உள்ள ஒரு சமூகத்தைச் சேர்ந்த பொதுமக்கள் நரசப்பன் குடியிருந்து வரும் வீட்டைச் சுற்றிலும் சனிக்கிழமை கம்பி வேலி அமைத்து வீட்டில் உள்ளவர்கள் வெளியே வரமுடியாதபடி செய்துள்ளனர். இதனையறிந்து வருவாய்த் துறை மற்றும் காவல்துறையினர் நிகழ்விடத்திற்கு வந்து இரு தரப்பினரிடம் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தி, இதுபோன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என அறிவுறுத்தி, வீட்டைச் சுற்றி அமைக்கப்பட்டிருந்த கம்பி வேலியை உட னடியாக அகற்றினர்.