தருமபுரி, அக். 3- சீங்கேரி அருகே சாலை விபத்தில் விவசாயி ஒருவர் பலியான நிலையில், தொடர் விபத்துகளை தடுக்க, உடனடியாக பிரிவு சாலை மற்றும் தரைப்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தருமபுரி மாவட்டம், மகேந்திரமங்கலம் அடுத்த ஒட்டுப் பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி மாதப்பன் (58). இவர் ஜிட்டாண்டஅள்ளியிலிருந்து வெள்ளிசந்தை நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, சீங்கேரி அருகே சென்று கொண்டிருந்த போது பின்னால் இருந்து வந்த சொகுசு கார் இருசக்கர வாகனம் மீது மோதியதில் மாதப்பன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த பாலக்கோடு டி.எஸ்.பி. மனோகரன் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று இறந்த உடலை மீட்டு பிரேத பரி சோதனைக்காக பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். விபத்து குறித்து நேரில் ஆய்வு செய்தார். அப்போது அப்பகுதி மக்கள் புதிய தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்ட பின்னர் இப்பகுதியில் தொடர் விபத்துக்கள் ஏற்படுகிறது. இப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் தினமும் சாலையை கடந்து செல்ல வேண்டி உள்ளதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. அதனால், இப்பகுதியில் பிரிவு சாலை மற்றும் தரைப்பாலம் அமைக்கக் கோரி நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்த நிலையில் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் புதிய தேசிய நெடுஞ்சாலை பயன்பாட்டிற்கு வந்துள்ளதால் தொடர் விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன. எனவே, உடனடியாக பிரிவு சாலை மற்றும் தரைப்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.