கோவை காந்திபுரம் கிரஸ்கட் சாலையில் தேநீர்க் கடையில் வைத்து குட்கா விற்பனையில் ஈடுபட்ட ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த நபரை காவல்துறையினர் கைது செய்து, கடைக்குச் சீல் வைத்தனர்.
கோவை மாவட்டம் முழுவதும் குட்கா விற்பனை மற்றும் கடத்தலைத் தடுக்க மாவட்டம் மற்றும் மாநகர காவல்துறை, உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கோவை காந்திபுரம் கிரஸ்கட் சாலையில் உள்ள தேநீர்க் கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனைச் செய்யப்படுவதாக காட்டூர் காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுடன் அங்குச் சென்ற காவல்துறையினர் கடையில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கடையில் அரசால் தடைச் செய்யப்பட்ட குட்கா பொருட்கள் மூட்டைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து கடை உரிமையாளரான ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த தினேஷ்குமார் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
மேலும் கடையில் பதுக்கி வைத்திருந்த சுமார் 77 கிலோ குட்கா பொருட்களைப் பறிமுதல் செய்தனர். இதையடுத்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தேநீர்க் கடைக்குச் சீல் வைத்துச் சென்றனர். இதே போலத் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களைச் சட்டவிரோதமாக விற்பனை செய்வோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.