உடுமலை, பிப்.19- உடுமலை அருகே அரசு பேருந்தும், ஆம்னி வேனும் நேருக்கு நேர் மோதியதில் 6 பேர் படுகாயமடைந்துள்ளனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சி தாலுகா ஆழியார் நகரில் உணவகம் நடத்தி வருபவர் சீனிவாசன். இவர் குடும்பதினருடன் ஆம்னிவேனில் திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு சென்று விட்டு பொள்ளாச்சி திரும்பி கொண்டிருந்தனர். இந்நிலையில், உடுமலை தாலுகா பாலப்பம்பட்டி அருகே வரும் போது கோவையில் இருந்து பழனி நோக்கி சென்ற அரசு பேருந்துடன் ஆம்னி வேன் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஆம்னிவேனில் பயணம் செய்த 6 பேர் படுகாயம் அடைந்தனர். உடுமலை அரசு மருத்துவமனையில் 3 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 3 பேர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.