திருப்பூர், ஜன.13- பொங்கல் திருவிழாவை ஒட்டி சொந்த ஊர்களுக்கு செல்லும் பொதுமக்களுக்காக 320 சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். திருப்பூர் பனியன் நிறுவனங்களில் பணியாற்றி வரும் பிறமாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் பொங்கல் திருவிழாவையொட்டி சொந்த ஊருக்கு செல்ல புறப்பட்டுள்ளனர். இதனால் புதுமார்க்கெட் வீதி மற்றும் திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் ஏராளமானோர் குவிய துவங்கி உள்ளனர். பொதுமக்கள் சிரமமின்றி சொந்த ஊருக்கு செல்ல சேலம், திருவண்ணாமலை, திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மதுரை, தேனி, சிவகங்கை, சிவகாசி, சென்னை, திருச்செந்தூர், நாகர்கோவில் உள்ளிட்ட ஊர்களுக்கு 320 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதன் மூலம் 630 நடை கூடுதலாக இயக்கப்படவுள்ளது. சிறப்பு பேருந்தை மேற்பார்வையிட 30 அலுவலர்கள் அடங்கிய குழு திருப்பூரில் உள்ள 3 பேருந்து நிலையத்திலும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அசம்பாவிதங்களை தடுக்கவும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும் மாநகர காவல் துறை சார்பில் 200க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.