districts

img

கோவையில் உயர்ரக போதைப் பொருள் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை சுகுணாபுரம் அருகே உயர்ரக போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட 3 இளைஞர்களை குனியமுத்தூர் காவல்துறையினர் கைது செய்தனர்.

கோவை குனியமுத்தூர் அடுத்த சுகுணாபுரம் மைல்கல் பகுதியில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து குனியமுத்தூர் உதவி ஆய்வாளர் ராஜா தலைமையிலான காவல்துறையினர் மைல்கல் பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த மூன்று இளைஞர்களைப் பிடித்து விசாரித்த போது, அவர்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளித்தனர். இதனால் சந்தேகமடைந்த காவல்துறையினர் மூவரையும் சோதனையிட்டனர்.

அப்போது அவர்களிடம் மெத்தப்பெட்மைன் என்ற உயர்ரக போதைப் பொருளை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் பிடிபட்ட நபர்கள் ஈச்சனாரி பகுதியைச் சேர்ந்த சிவதாஸ் மகன் ஹரிஹரன் (30), மாசிலாமணி மகன் மனோஜ் குமார் (30), சிட்கோ பகுதியைச் சேர்ந்த முருகானந்தம் மகன் மிதுஸ் (23), என்பதும் தெரியவந்தது. இதையடுத்து மூவரையும் கைது செய்த காவல்துறை அவர்களிடமிருந்து 10 கிராம் மெத்தப்பெட்மைன் என்ற உயர்ரக போதைப் பொருள், கார், இருசக்கர வாகனம் மற்றும் செல்போன்களை காவல்துறை பறிமுதல் செய்தனர்

;