தருமபுரி, டிச.3- காரிமங்கலம் வழியாக சேலத்திற்கு லாரியில் ரகசிய அறை அமைத்து 11 லட்சம் ரூபாய் மதிப்பிலான 2 டன் குட்கா போலீசார் பறிமுதல் செய்தனர். பெங்களூரு பகுதியில் இருந்து தருமபுரி மாவட்டம், காரி மங்கலம் வழியாக சேலம் மாவட்டத்திற்கு குட்கா, பான் மசாலா, ஹான்ஸ் உள்ளிட்ட பொருட்கள் தொடர்ந்து நான்கு சக்கர வாகனங்களில் கடத்துவதாக தருமபுரி காவல் துறையில் தொடர்ந்து தகவல்கள் வந்துள்ளது. காரி மங்கலம் சோதனை சாவடியில் போலீசார் வியாழனன்று இரவு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கண்டெய்னர் லாரியில், டிஸ்யூ பேப்பர் மூட்டை களுடன், ரகசிய அறை அமைத்து தடைசெய்யப்பட்ட குட்கா பொருள் இருப்பது தெரியவந்தது. பின்னர் வாகனத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ரூ. 11 லட்சம் மதிப்பிலான தடைசெய்யப்பட்ட 2 டன் குட்கா பொருள் அடங்கிய 150 மூட்டைகள் என தெரியவந்தது. இதையடுத்து வாகனத்தை பறிமுதல் செய்து, தப்பி ஓடிய ஓட்டுநரை போலீசார் தேடி வருகின்றனர்.