districts

img

திருநர்களுக்கு 2% இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் - வானவில் கூட்டமைப்பு வலியுறுத்தல்

அரசு வேலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் திருநர்களுக்கு  2 சதவீதம் இடஒதுக்கீடு சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என திருநர் அமைப்புகளின் வானவில் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து  கோயம்புத்தூர் பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்ற  செய்தியாளர் சந்திப்பில்  கோவை வானவில் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் கல்கி சுப்பிரமணியம்,  சிவகுமார் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
தனிநபர்களின் உரிமைகளைக் கொண்டாடவும்,  பெருக்கவும் மற்றும் வலுப்படுத்தவும்   ஜூன் மாதம் உலகம் முழுவதும் "சுயமரியாதை மாதமாக" அங்கீகரிக்கப்படுகிறது. லெஸ்பியன்,  கே,  பைசெக்சுவல்,  டிரான்ஸ்,  குயர்,  இன்டர்செக்ஸ்,  ஆரோ/ஏஸ் தனிநபர்கள் பாலினம் மற்றும் பாலிர்பு அடிப்படையிலான சிறுபான்மைக் குழுவைச் சேர்ந்தவர்கள்  பெரும்பான்மை சமூகத்தில் இருந்து தொடர்ந்து பல்வேறு வகையான பாகுபாடுகளை எதிர்கொள்கின்றனர்.  இந்த சுயமரியாதை மாத நிகழ்வுகள் மூலம் பாலினம் மற்றும் பாலுணர்வை உள்ளடக்கிய உரையாடல்களை உருவாக்க முயல்கிறோம்.  திருநங்கைகள் நல வாரியத்தில் திருநம்பிகளை சேர்த்ததற்காக தமிழக முதல்வர் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். தன்பால் ஈர்ப்பாளர்கள் மற்றும் இருபாலின ஆண்களை குறிவைத்து மிரட்டி மிரட்டி பணம் பறித்தல் போன்றவற்றுக்கு எதிராக,  குறிப்பாக கோவையில் நடைபெறும் இதுபோன்ற சம்பவங்களில் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.   பெரும்பான்மை சமூகத்தில் இருந்து தொடர்ந்து பல்வேறு வகையான பாகுபாடுகளை எல்ஜிபிடிக்யூ பிளஸ் பிரிவினர்   எதிர்கொள்கின்றனர். வீட்டில் இருந்து வெளியேற்றப்படுவது போன்ற நெருக்கடியான சூழ்நிலைகளின்போது அவர்களைப் பாதுகாக்க அனைத்து மாவட்டங்களிலும் தங்குமிட வசதியை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும். அனைத்து பள்ளிகள்,  கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் எல்ஜிபிடிக்யூ பிளஸ் உள்ளடக்கிய பாலியல் கல்வி வகுப்புகளை வழங்க வேண்டும்.  பெரும்பான்மை சக்திகளின் ஒடுக்குமுறையை எதிர்க்கும் அனைவருடனும் நாங்கள் ஒற்றுமையாக  கைகோர்க்கிறோம்.  சாதி,  வகுப்பு,  மொழி,  உணவு முறை,  ஊனம்,  மதம் மற்றும் பிற காரணிகளின் அடிப்படையில் மனித உரிமை மீறல்களை  உறுதியாக  எதிர்க்கிறோம் அரசு வேலை,  கல்வி நிறுவனங்களில் திருநர்களுக்கு  2 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வேண்டும். தமிழகத்தில் திருநர்கள் தங்கள் பெயர்,  பாலினத்தை மாற்றுவதற்கு,  அறுவை சிகிச்சைக்கான ஆதாரம் அல்லது மூன்றாம் பாலினத்தவர் நலவாரியத்திடமிருந்து ஓர் அடையாள ஆவணத்தை சமர்ப்பிக்கும்படி வலியுறுத்துகின்றனர். கல்வி சான்றிதழில் பெயர்,  பாலின மாற்றம் கோரும் நபர்களிடம் மருத்துவச் சான்றிதழ்களை கேட்கின்றனர். இந்த நடைமுறைகளை கைவிட வேண்டும்.
அனைத்து பொது இடங்களிலும்,  அரசுக்கு சொந்தமான நிறுவனங்களிலும் பாலின நடுநிலை கழிப்பறைகளை உருவாக்கிட வேண்டும் என மாநில அரசை  வலியுறுத்துகிறோம்.  எல்ஜிபிடிக்யூ பிளஸ் நபர்களின் உரிமைகளை கொண்டாடவும்,  வலுப்படுத்தவும் ஜூன் மாதம் உலகம் முழுவதும் சுயமரியாதை மாதமாக கடைபிடிக்கப்படுகிறது.   சுயமரியாதை மாதத்தை முன்னிட்டு வரும்  18ஆம் தேதி திரளானோர் கலந்துகொள்ளும் பிரைட் பேரணி நடைபெறும்  என்றனர்.