districts

img

ஓபே பாளையம் இருளர் மக்களுக்கு நில உரிமைச் சான்று: சிபிஎம்

கிருஷ்ணகிரி, ஜூலை 24 - சூளகிரி வட்டம் உத்தனபள்ளி அருகில் ஓபே பாளையம் கிராமம் உள்ளது. இங்கு இருளர் பழங்குடி குடும்பங்களை சேர்ந்த 25 குடும்பங்கள் 15 வீடுகளில் வசிக்கின்றனர். மிக சிறிய வீட்டுக்குள் 2,3 குடும்பங்கள் சேர்ந்து வாழ்கின்றனர். ஒரு சில வீடுகளில் 10 பேர் வரை உள்ளனர். இவர்களில் இருவருக்கு மட்டுமே சாதிச்சான்று உள்ளது. இக்குடியிருப்பிற்கு சாலை வசதி, குடிநீர், மின்விளக்கு, சுகாதார, அடிப்படை வசதிகள் ஏதும் இல்லை. வேலை, வருமானம் இல்லாத நிலையில் அங்குள்ள மக்கள் வாழ்வாதாரம் இழந்து வறுமையில் தவிக்கின்றனர். “கிராமத்தில் 100 பேர் வரை உள்ளோம். 100 நாள் வேலை அட்டைக்கு பலமுறை முயற்சித்தும் கிடைக்கவில்லை. நீண்டகால அனுபவ சாகுபடி நிலங்களுக்கு நில உரிமைச் சான்று கொடுக்க  வருவாய்த்துறை அதிகாரிகள் மறுத்து வருகின்றனர்” என்று அங்குள்ள மக்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் எம்.முருகேஷ், செயலாளர் சி.பிரகாஷ், மார்க்சிஸ்ட் கட்சி கிளை செயலாளர் கோபாலப்பா ஆகியோர் அந்த பகுதி மக்களை சந்தித்து பேசினர். மலைவாழ் மக்கள் சங்க கிளையையும் அமைத்தனர். இதனைத் தொடர்ந்து, ஓபேபாளையம் இருளர் மக்களுக்கு குடும்பத்திற்கு ஒரு வீடு கட்டி தர வேண்டும், குடியிருப்பு பகுதிக்கு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும், அனுபவ நிலங்களுக்கு நில உரிமைச் சான்று வழங்க வேண்டும், 100 நாள் வேலை அட்டை வழங்க வேண்டும் என்று விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகிகள் ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்தனர்.