கிருஷ்ணகிரி, மே 30- தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஓசூர் வட்ட 7வது மாநாடு சிஐடியு அலுவலகத்தில் நடைபெற்றது. பெங்களூருவில் இருந்து கெலவரப் பள்ளி அணைக்கு வரும் துர்நாற்றம் மிகுந்த ரசாயன கழிவுநீர் கலப்பதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநாடு கோரிக்கை விடுத்துள்ளது. மாநாட்டிற்கு வட்ட தலைவர் திம்மா ரெட்டி தலைமை தாங்கினார் மார்க்சிஸ்ட் கட்சி மாநகரச் செயலாளர் சி.பி.ஜெயராமன் துவக்க உரையாற்றினார்.வட்ட செயலாளர் தேவராஜ் அறிக்கை சமர்பித்தார். மாவட்ட செயலாளர் ஸ்ரீதர், மார்க்சிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் ராஜா ரெட்டி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் நாகேஷ் பாபு, சங்கத்தின் மாவட்ட செயலாளர் பிரகாஷ் ஆகியோர் வாழ்த்தி பேசினர். ஓசூர் ஒன்றியத்தில் ஏழை விவசாயிகள் மற்றும் கூலி தொழிலாளர்கள் குடியிருக்கும் அரசு புறம்போக்கு நிலங்களில் கட்டியுள்ள வீடுகளுக்கு பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மாநாட்டில் ஓசூர் வட்ட தலைவராக திம்மாரெட்டி,செயலாளராக ஆனந்த குமார்,பொருளாராக தேவராஜ் தேர்வு செய்யப்பட்டனர்.