கிருஷ்ணகிரி,பிப்.14- கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் காவேரி மருத்துவமனையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்து சாதனை படைத்துள்ளனர். சூளகிரி பகுதியை சேர்ந்த 60 வயது ராஜம்மா ஹெப்படைட்டீஸ் பி தொடர்பான மஞ்சள் காமாலையால் கல்லீரல் பாதித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் ஓசூர் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் ஆலோசனையின் பேரில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மட்டுமே உயிரை காப்பாற்ற முடியும் என்பதை மருத்துவர்கள் பாதிக்கப்பட்ட ராஜம்மா, மகன் பால்ராஜ் ஆகி யோரிடம் தெரிவித்தனர். முதலில் சிகிச்சைக்கு மறுத்த ராஜம்மா தன் மகன் பால்ராஜ் கூறியதன் பேரில் அறுவை சிகிச்சைக்கு ஒப்புக் கொண்டார். கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு மருத்துவச் சட்டப்படியான அனைத்து வழி முறைகளும் மேற்கொள்ளப்பட்டு, பதிவு செய்யப்பட்டது. 15 நாட்களில் கல்லீரல் நன்கொடையாக பெறப் பட்டது.22.10.2022 அன்று குடல் மற்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மூத்த மருத்துவர் முரளி ஜெயராமன் தலைமையிலான 6 மருத்துவர்கள் கொண்ட குழு வினர் 10 மணி நேரம் அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். வெற்றிகரமான மாற்று அறுவை சிகிச்சைக்கு பிறகு தொடர்ந்து அளிக்கப்பட்ட சிகிச்சையில் முழுமையாக குணமடைந்து 7 நாட்களுக்குப் பிறகு ராஜம்மா வீடு திரும்பினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மருத்துவமனையின் இயக்குநர் விஜயபாஸ்கர்” மாற்று அறுவை சிகிச்சை பெருநகரங்களில் மட்டுமே மேற்கொள்ளப்படும் நிலையில் ஓசூர் நகரில் இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடியும் என்பதை நிரூ பித்துள்ளோம், முதல்வர் காப்பீட்டு திட்ட மும் இங்கு ஏற்றுக் கொள்ளப்படு கிறது” என்றார். மருத்துவர் அரவிந்தன் மனித வள மேம்பாட்டு துறை அலுவலர் ஜோஸ், பிந்து ஆகி யோர் உடனிருந்தனர்.