கிருஷ்ணகிரி, ஜூன் 30- கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வட்டம் வேலம்பட்டி அருகே பாலேகுளி ஊராட்சிக்குட்பட்டது தோப்பூர் கிராமம். 75 ஆண்டுகள் பழமையான இந்த கிராமத்தில் மலை அடிவாரம் வரை 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வேலம்பட்டி அடுத்து பாலேகுளி தோப்பூர் வழியாக மலை அடிவாரம் வரை தார் சாலை அமைக்கப்பட்டது. தோப்பூரில் 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை இருந்த வீடுகளும், அதன் பிறகு கட்டப்பட்ட வீடுகளும் உள்ளது. இந்த வீடுகளுக்கு கிராம நிர்வாகத்தால் வீட்டு வரி, நில வரி ரசீது, பட்டா வழங்கப் பட்டுள்ளன. குடிநீர் இணைப்பு, மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் திடீரென சாலையின் இருபுறமும் உள்ள 23 வீடுகள் இடிக்கப் போவதாக அறிவித்து, வீடுகளை இடிக்க அதிகாரிகள் முற்பட்டனர். கிராம மக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி காவல்துறை உதவியுடன் கிராமத்தின் கடைசியில் இருந்த ஒரு வீட்டை இடிக்கத் துவங்கினர். இதுகுறித்து தகவல் அறிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போச்சம்பள்ளி வட்டச் செயலாளர் சாமு, விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பிரகாஷ், வட்டச் செயலாளர் மாதலிங்கம், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் சுரேஷ், பால் உற்பத்தியாளர்கள் சங்க மாவட்டத் தலைவர் கே.சி.ராமசாமி உள்ளிட்ட பலர் அரசு அதிகாரிகளை, ஜேசிபி இயந்திரத்தையும் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நடைபெற்ற பேச்சுவார்த்தை யில், 1962இல் வாரி புறம்போக்காக மாற்றப் பட்டுள்ளது என்றும், இங்கு கட்டியுள்ள வீடுகளை அப்புறப்படுத்த உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் அதிகாரிகள் வீடுகள் இடிப்பதை நிறுத்திவிட்டு திரும்பிச் சென்றனர். இதையடுத்து போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.