districts

காளைமாடு முட்டி ஒருவர் பலி விழாக்குழுவினர் மீது வழக்கு

கிருஷ்ணகிரி, ஏப். 27- பழையயப்பேட்டையில் நடந்த எருது விடும் விழாவில் காளை முட்டி ஒருவர் உயிரிழந்தார். விழாக்குழுவினர் மீது காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கிருஷ்ணகிரி பழைய பேட்டையில் எருது விடும் விழா திங்களன்று (ஏப். 25) நடைபெற்றது. இதில் கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர், மற்றும் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்ட காளை மாடுகள் பங்கேற்றன. நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். வெற்றிபெற்ற காளை மாடுகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.  இந்நிலையில் காளை மாடு ஒன்று திடீரென கூட்டத்தில் புகுந்து திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அருகே மடவாளம பகுதியை சேர்ந்த ராஜேஸ் என்பவரை  குத்தி தூக்கி போட்டது. அவரை மீட்டு கிருஷ்ணகிரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். ஆனால் அவர் பரிதாபமாக வழியிலேயே உயிரிழந்தார். மேலும் 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதையடுத்து காவல் துறையினர் விழாக்குழுவினர் 13 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.