காஞ்சிபுரம், ஜூன் 29- விவசாய உற்பத்தியில் நானோ யூரியா 500 மி.லி தெளித்தாலே 45 கிலோ யூரியா பலன் தரும் என விவசாய தொழில்நுட்ப வல்லுனர்கள் கூறியுள்ளதாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள் பயன்பெற அரசு மூலம் ஒப்புதல் அளிக்கப்பட்ட நானோ யூரியா என்பது இலை வழி யாக தெளித்திட உகந்த தழைச்சத்து உரமாகும். இதில் சாதாரண யூரியா குருணையைவிட பல மடங்கு சத்து அதிகம் உள்ளது. அதை பலப்பல துகள்களாகச் சிறிது சிறிதாக நானோ துகள்களாகப் பிரிக்கும் போது அதிகச் தழைச்சத்தை அளித்திட வாய்ப்புள்ளது. இதனை இலை வழியே தெளிக்கும் போது உடனடியாக பயிரின் பல பாகங்களுக்கும் எடுத்து செல்லப்படுவதால் விரைவில் பச்சை கட்டும் நன்மையும் நமக்கு கிடைக்கிறது. தன் தேவையை விட கூடுதலாக தழைச்சத்து உட்கிறகிக்கப்பட்டால் அதனை செல்லின் உட்புறம் உள்ள வேக்யோல் எனும் சில பகுதியில் சேமிக்கப்பட்டு தேவைப்படும் தருணம் எடுத்து பயன்படுத்த முடிகிறது. எனவே, சுற்றுப்புறச்சூழல் காக்கப்படுவது மட்டுமல்லாமல், பிற உயிரினப் பெருக்கம் மூலமாக உணவுச்சங்கிலி உடைபடுவதில்லை. உர உபயோகத்திறன் மேம்பாடு குறையில்லா பயிர் வளரும் சூழல் நன்மை செய்யும் உயிரினத்துக்கு சேதமில்லாத சூழல் நிலவுவதால் நானோ யூரியா நன்மைகள் பல தரும் உரமாக உள்ளது. எனவே, அனைவரும் இதனைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், விபரங்களுக்கு 98420 07125 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.