காஞ்சிபுரம், மார்ச் 25- காஞ்சிபுரம் காஞ்சி சாலையில் பிரபல பட்டு உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனம் இயங்கி வருகிறது. இதன் உரிமையாளர் கோபி நாத். இவருக்கு ஒருவர் போன் செய்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பேசுவதாக கூறினார். பின்னர் அதே அழைப்பை வாங்கி மற்றொருவர் பேசினார். அவர், தான் மாவட்ட ஆட்சியரின் சிறப்பு உதவியாளர் என்றும் அவசரமாக பணம் தேவைப்படுவதாகவும், வங்கி கணக்கிற்கு ரூ.75 ஆயிரம் பணம் அனுப்புமாறும் கூறி வங்கி கணக்கு எண்ணை அனுப்பினார். இதில் சந்தேகம் அடைந்த கோபிநாத் காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுதாகரிடம் புகார் அளித்தார். இதனை சைபர் கிரைம் போலீசார் விசாரிக்க எஸ்.பி.சுதாகர் உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் சைபர் கிரைம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர். புதுக்கோட்டை பகுதியை சேர்ந்த சந்தான பாரதி என்பவர் ஆள் மாறாட்டம் செய்து தொலைபேசியில் பணம் கேட்டது தெரிய வந்தது. அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில் அவர் வேறு ஒரு வழக்கில் தஞ்சாவூர் சிறையில் தண்டனை அனுபவித்து வருவது தெரியவந்தது. இந்த நிலையில், மீண்டும் அவரை இவ்வழக்கில் போலீசார் கைது செய்தனர். சந்தானம் இதேபோல் பல்வேறு மாவட்ட ஆட்சியரின் பெயரை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.