குன்றத்தூர், ஜூலை 30- காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் வட்டத்திற்குட்பட்ட வண்டலூர் மீஞ்சூர் வெளிவட்ட சாலை, மாதா உயர்நிலை பள்ளி அருகில் புதிதாக துணைமின் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்தில் மின்சார கட்டணம் வசூல் மையம் மாடியில் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் மாற்றுத் திறனாளிகள், முதியோர், பெண்கள் ஆகியோருக்கு மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குன்றத்தூர் வட்டச் செயலாளர் எம்.எஸ்.ராஜா கூறியாதாவது குன்றத்தூர் உப கோட்ட அலுவலகம், குன்றத்தூர் ஊரகம் பிரிவு அலுவலகம் மற்றும் கட்டணம் வசூல் மையம் ஆகிய அலுவலகங்கள் எண்.1, பல்ல தெரு, குன்றத்தூரில் செயல்பட்டு வந்தது. தற்போது மாதா தனியார் பள்ளி அருகில் புதிதாக கட்டப்பட்ட மின்சார அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் உட்கட்டமைப்பு முறையாக கட்டமைக்கப் படவில்லை மேலும் தரைத்தளத்தில் மின் கட்டணம் செலுத்தும் இடம் அமைக்க வேண்டும். மின் கட்டணம் செலுத்த பொதுமக்கள் வரிசையில் நிற்கும் இடத்தில் நிழல் கூரை அமைக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு தடையில்லா சூழலை உருவாக்கும் வகையில் மாற்றுத் திறனாளிகள் உரிமை சட்டம் 2016, பிரிவு 45 (1) - யின்படி அனைத்து பொதுக் கட்டிடங்களையும் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்த ஏதுவாக மாற்றி அமைக்க வேண்டும். என அரசாணை படி புதிதாக கட்டப்பட்ட மின்சார அலுவலகத்தில் சாய்தள பாதை அமைக்க வேண்டும். புதிதாக திறக்கப்பட்ட மின்சார அலுவலகத்தில் முறையான உட்கட்டமைப்புகளை செய்து மாற்றுத்திறனாளிகள் பெண்கள் முதியவர்கள் தடையில்லா மல் மின்சார அலுவலகத்தை அணுகும் வகையில் ஏற்பாடு செய்து புதிய மின்சார அலுவலகத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். அதுவரை ஏற்கனவே செயல்பட்டு வந்த இடத்திலேயே மின்சார அலுவலகம் மீண்டும் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.