districts

img

வாலாஜாபாத் அருகே சிலிண்டர் கிடங்கில் தீ விபத்து

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத்தில் தனியார் சிலிண்டர் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 12 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் தாலுக்கா, தேவரியம்பாக்கம் கிராமத்தில் இயங்கி வரும் ஏ.எஸ்.என் கேஸ் ஏஜென்சி என்ற பெயரில் ஜீவாநந்தம் என்பவர் கேஸ் குடோன் நடத்தி வருகிறார். இந்த கேஸ் குடோனில் இருந்து ஒரக்கடம் சுற்றுவட்டார தொழிற்சாலைகளுக்கு வணிகரீதியான கேஸ் சிலிண்டர் சப்ளை செய்யப்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில், இன்று மாலை 6 மணி அளவில் கேஸ் குடோனில் திடிரென தீப்பிடித்தது. அதனைத் தொடர்ந்து கேஸ் குடோனில் இருந்த கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறியுள்ளது.

இதன் காரணமாக மொத்தம் 12 பேர் படுகாயமடைந்துள்ளனர். தீ விபத்து குறித்த தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் உடனடியாக விரைந்து  வந்து விபத்தில் சிக்கிய அனைவரையும் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும், சம்பவ இடத்தில் காஞ்ச்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எம்.சுதாகர், வருவாய் கோட்டாட்சியர் கனிமொழி, உத்திரமேரூர் தொகுதி எம்எல்ஏ கா.சுந்தர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணிகளை மேற்பார்வையிட்டுள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் மற்றும் அதன் அருகேயுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

;