கள்ளக்குறிச்சி, மார்ச் 21- அரசுப்பள்ளிகளில் மாணவர்களுடைய சேர்க்கை அதிகரிப்பதற்கு பெற்றோர் பள்ளிக்கல்வி துறையுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் வேண்டுகோள் விடுத்துள்ளார். கள்ளக்குறிச்சி அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டத்தின் செயல்பாடுகளை பார்வையிட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் பின்னர் நிகழ்ச்சியில் பேசுகையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் தலைமையாசிரியரை செயலாளராகக் கொண்டு பள்ளி மேலாண்மைக் குழு அமைக்கப்பட்டுள்ளது என்றார். இக்குழுவில் ஒரு மாணவரின் பெற்றோர், தலைமையாசிரியர், ஒரு ஆண் அல்லது பெண் ஆசிரியர், சமூக சேவகர் மகளிர் சுய உதவிக்குழுவைச் சேர்ந்த பெற்றோர் உள்பட 20 பேரைக் கொண்டு குழு அமைக்கப்பட்டு, பள்ளியின் மேலாண்மைப் பணிகள் நடைபெற உள்ளது என்றும் அவர் கூறினார். இதில் 50 விழுக்காட்டிற்கு மேல் பெண் உறுப்பி னர்கள் இடம்பெறுவார்கள். இருபால் மாணவர்களின் சேர்க்கையை அதிகரித்தல், இடைநின்ற மற்றும் பள்ளி செல்லா குழந்தைகளை பள்ளியில் சேர்த்தல், ஆசிரியர்களின் வருகை மற்றும் மாணவர்களின் வருகையை உறுதி செய்தல், பள்ளி தேவைகளை கண்ட றிந்து திட்ட அறிக்கை தயாரித்தல், குழந்தை களின் உரிமைகளை காத்தல், தரமான கல்வி பெறுவதை உறுதி செய்தல், தரமான சத்துணவு உண்பதை உறுதி செய்தல், பள்ளிக்கு வழங்கப்படும் தொகையை பள்ளி வளர்ச்சிக்கு முறையாக பயன்படுத்துவது போன்ற பணிகளை மேற்கொள்வது மேலாண்மை குழுவின் முக்கிய பணிகளாக இருக்கும் என்றும் அவர்கூறினார். இந்நிகழ்வில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் த.விஜயலட்சுமி கள்ளக்குறிச்சி மாவட்ட கல்வி அலுவலர் பா.சிவராமன், தலைமையாசிரியர் கீதா, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கென்னடி, நகராட்சி 6வது வார்டு உறுப்பினர் கே.சீனிவாசன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆர்.இராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.