districts

நிலுவையை வழங்காமல் அலைக்கழிக்கும் சர்க்கரை ஆலை: வேதனையில் விவசாயிகள்

கள்ளக்குறிச்சி, மார்ச் 27 - கரும்பு விவசாயிகளுக்கு தரணி சர்க்கரை ஆலை நிலுவைத் தொகையை வழங்காமல் அலைகழித்து வருகிறது. இதனால் விவசாயிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அடுத்த கலையநல்லூரில் தரணி சர்க்கரை ஆலை உள்ளது. தியாகதுருகம், திருக்கோவிலூர், ரிஷிவந்தியம், சங்கராபுரம் பகுதிகளைச் சேர்ந்த 2,500க்கும் மேற்பட்ட விவசாயிகள் இந்த சர்க்கரை ஆலைக்கு கரும்புகளை அனுப்பி வந்தனர். 2018-19 ஆண்டில் விவசாயிகளிடம் கரும்பு கொள்முதல் செய்த வகையில் ஆலை நிர்வாகம் 23.80 கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளது. கரும்பு கட்டுப்பாடு சட்டத்தின்படி 14 நாட்களுக்குள் தரவேண்டிய பணத்தை 4 ஆண்டுகளாகியும் ஆலை நிர்வாகம் தராமல் உள்ளது. இதனை கண்டித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஆலை மற்றும் ஆட்சியர் அலுவலகம் முன்பு பலகட்ட போராட்டங்களை நடத்தினர். 4 ஆண்டுகளாக ஆலை மூடப்பட்டு, கரும்பு அரவை நிறுத்தப்பட்டுள்ளது. இந்த ஆலையில் பதிவு செய்த கரும்பை வேறு ஆலைக்கு அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டு விவசாயிகள் மேலும் பாதிக்கப்பட்டனர். விவசாயிகள் கோரிக்கையை ஏற்று பிற ஆலைகளுக்கு கரும்பை மாற்றி அனுப்ப ஆட்சியர் உத்தரவிட்டார். ஆனால், நிலுவைத் தொகையை பெற்றுத் தருவதற்கான எந்த நடவடிக்கையும் அவர் எடுக்கவில்லை. கரும்பு விவசாயிகளுக்கு ஆதரவாக அரசியல் கட்சிகள் களத்தில் இறங்கி போராடி வருகின்றன. இது தவிர்த்து, விவசாயிகளுக்கு ஆதார விலை பாக்கித் தொகையாக 76.92 கோடி ரூபாய் உள்ளது. இந்த தொகையும் கிடைக்காமல் விவசாயிகள் வாழ்வாதாரம் கேள்வி குறியாகி வருகிறது. எனவே, தமிழக முதலமைச்சர் உடனடியாக தலையிட்டு, உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.