உளுந்தூர்பேட்டை, ஜூன் 29 - கள்ளக்குறிச்சி மாவட்டம் ஆத்தூர் மற்றும் நன்னாரம் ஊராட்சிகளில் காணாமல் போன ஏரி குளங்களை கண்டு பிடித்து ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி புதனன்று (ஜூன் 29) உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் ஆத்தூர், நன்னாரம் ஒன்றியக் கவுன்சிலர் இ.அலமேலு தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் டி.எம்.ஜெய்சங்கர், செயற்குழு உறுப்பினர்கள் டி.ஏழுமலை, பி.சுப்பிரமணியன், திருநாவலூர் மேற்கு ஒன்றியச் செயலாளர் டி.எஸ்.மோகன், மாவட்டக்குழு உறுப்பினர் கே.அய்யனார் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். பழைய நன்னாரம் பெரிய ஏரி மதகு மற்றும் உபரி நீர் வெளியேறும் கால்வாய்களை சீரமைக்க வேண்டும், செட்டியார் குளத்தை பாதுகாக்க வேண்டும், புத்தனந்தல் அணையில் இருந்து வெளியேறி பல்வேறு ஏரிகளுக்கு நீர் செல்லும் கால்வாயை சீரமைக்க வேண்டும், ஆத்தூர் பெரிய ஏரி, சித்தேரி மதகுகளை செப்பனிட வேண்டும், பிள்ளையார்குப்பம் ஏரி உள்ளிட்ட அனைத்து ஏரிகளிலும் ஆக்கிரமிப்புகளை அகற்றி கரைகளை புதுப்பிக்க வேண்டும், கோட்டையாம்பாளையம் கிராமத்தில் அரசு நிலத்தை வருவாய் துறை மூலம் அளந்து அத்துக்கல் நட்டு பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.