கள்ளக்குறிச்சி, மார்ச் 28- தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் குறை தீர்வு கூட்டம் நடத்தாததைக் கண்டித்து ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் திங்கட்கிழமை (மார்ச் 27) நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் சங்கத்தின் மாவட்டத் தலைவர் பி.வேலு, செயலாளர் எம்.ஆறுமுகம் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி செவ்வாய்க்கிழமை (மார்ச் 28) குறைதீர் கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இந்நிலையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாம் ஆட்சியர்ர் ஷ்ரவன்குமார் தலைமையில் செவ்வாயன்று நடைபெற்றது. இதில் 229 மனுக்கள் பெறப்பட்டன. 12 மாற்றுத் திறனாளிகளுக்கு தலா 9000 மதிப்பிலான மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் வழங்கப்பட்டது. மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கவும், நீர்நிலை அல்லாத இடங்களில் வசிப்பவர்களும், தரிசு, நத்தம், புறம்போக்கில் வசிப்பவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். இதில் மாற்றுத்திறனாளி நல அலுவலர் க.சுப்பிரமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.