districts

img

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய கோரசம்பவம்

தந்தை பெயிண்டர்  தாய் தினக் கூலித் தொழிலாளி இவர்கள் இருவரும் விஷச்சாராயத்திற்கு பலியாகிவிட்டனர். அவர்களது மூன்று பிள்ளைகளின் எதிர்காலம் என்னவாகும். கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் விஷச்சாராயம் குடித்ததில் 38 பேர் பலியாகியுள்ளனர்.

இவர்களில் பெயிண்டர் வேலை பார்த்த சுரேஷ் (42), அவரது மனைவி வடிவுக்கரசி (34) ஆகியோர் அடங்குவர். 98 பேர் சிகிச்சையில் உள்ளனர்.  பலியான சுரேஷ்-வடிவுக்கரசி தம்பதியினருக்கு கோகிலா (16). என்ற மகளும்  ஹரிஷ் (15), ராகவன் (14) என்ற இரு மகன்களும் உள்ளனர். இவர்களைப் போல் இளம் வயதினரின் தாயையோ அல்லது தந்தையையோ கள்ளச்சாராயம் பறித்துக் கொண்டது. தாயையும் தந்தையையும் இழந்து தவிக்கும் கோகிலா கூறுகையில், “எனது தந்தை விபத்தில் ஒரு கையை இழந்தார்.

எங்களைக் காப்பாற்ற கடுமையாக உழைத்தார். உடல் சோர்வை போக்குவதற்கு சாராயத்திற்கு அடிமையானார்.  செவ்வாய்க்கிழமை (ஜூன் 18, 2024) காலை வேலையிலிருந்து வீட்டிற்கு வந்த அவர், வயிறு கடுமையாக வலிக்கிறது. பார்வை மங்கலாக உள்ளது எனக் கூறினார்.

இதையடுத்து எனது உறவினர்கள் அக்கம்பக்கத்தினர்  மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். குடிக்க வேண்டாம் என்று அப்பாவிடம் பலமுறை கெஞ்சினேன். அதற்கு பலனில்லாமல் போய்விட்டது என்றார்.

ஆனால் என் அம்மா மதுவுக்கு அடிமையானவர் அல்ல. தினசரி கூலித் தொழிலாளியாக பணிபுரிந்தார்.  ஃபிஸ்துலா நோயால் அவதிப்பட்டு வந்தார். (ஃபிஸ்துலாக்கள் பொதுவாக காயம் அல்லது அறுவை சிகிச்சையின் விளைவாகும். தொற்று அல்லது வீக்கம் கூட ஒரு ஃபிஸ்துலா உருவாக காரணமாக இருக்கலாம்.) செவ்வாய்க்கிழமை எனது தந்தை வீட்டில் வைத்திருந்த விஷச்சாராயத்தை எனது தாய் தவறுதலாக உட்கொண்டார்.  இதையடுத்து அவரது பார்வை மங்கியுள்ளது.

இதை அவர் யாரிடமும் சொல்லவில்லை. பின்னர் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு எனது தாய் இறந்துவிட்டார். தொடர்ந்து என் தந்தையும் இறந்துவிட்டார் ஆனால் முதலில் தாய் இறந்தார். அதைத் தொடர்ந்து என் தந்தை இறந்தார் என்றார். செவ்வாய்க்கிழமை மாலை பள்ளியில் இருந்து திரும்பிய பிறகுதான் பெற்றோர் இறந்தது மூன்று குழந்தைகளுக்கும் தெரியவந்திருக்கிறது.

"எங்கள் பெற்றோர் இறந்துவிட்டார்கள் என்று தொலைக்காட்சியைப் பார்த்த பிறகுதான் நாங்கள் அறிந்தோம்" என்றார் கோகிலா. "எங்கள் குடும்பம் சிதைந்துவிட்டது, இப்போது 10 மற்றும் 9-ஆம் வகுப்பு படிக்கும் எனது இரண்டு சகோதரர்களை எப்படி  வளர்ப்பது, அவர்களை எப்படி படிக்க வைப்பது என்று எனக்குத் தெரியவில்லை. எங்களது எதிர்காலம் என்னவாகும். எனது பெற்றோர்கள் சம்பாதித்த சொற்ப வருமானம் நாங்கள் பெற்ற கடன்களை திரும்பச் செலுத்துவதற்கே செலவாகிவிட்டது என்றார்.