districts

தொகுதியின் 10 கோரிக்கைகள்: ஆட்சியரிடம் வழங்கினார் செந்தில்குமார் எம்எல்ஏ

கள்ளக்குறிச்சி, செப்.20- தமிழக முதலமைச்சர் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் தங்கள் தொகுதியில் நிறைவேற்றப்படாத 10 முக்கிய திட்டங்கள் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்குமாறு கேட்டுக் கொண்டார்.  அதன்படி, கள்ளக்குறிச்சி சட்டமன்றத் உறுப்பினர் செந்தில்குமார் (அதிமுக) மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமாரை சந்தித்து கோரிக்கை மனுவை வழங்கினார்.  அதன் விவரம் வருமாறு:-  கள்ளக்குறிச்சியில் புறநகர்பேருந்து நிலையம் அமைக்க வேண்டும், கச்சிராயபாளையம் சாலை, சேலம் சாலை, துருகம் சாலை, சங்கராபுரம் சாலை இணையும் நான்குமுனை சந்திப்பில் உயர்மட்ட வட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும். வெளிவட்ட சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும். அரசு சார்பில் சட்டக்கல்லூரி, பொறியியல் கல்லூரி, செவிலியர் கல்லூரி, மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் அமைத்து கொடுக்க வேண்டும்.  சித்தலூர் - பானையங்கால் சாலையின் குறுக்கே மணிமுக்தா ஆற்றின் குறுக்கே மேம்பாலம், சிறுமங்கலம் - பெருமங்கலம் சாலையின் குறுக்கே மயூரா ஆற்றில் மேம்பாலம், ரோடு மாமனந்தல் - க.மாமனந்தல் கோமுகி ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் அமைக்க வேண்டும். கள்ளக்குறிச்சி அரசு கலை அறிவியல் கல்லூரியில் பயிலும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு தனித்தனியாக விடுதி வசதி ஏற்படுத்தி தரவேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார். மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் மனுவிலுள்ள திட்டங்கள் குறித்து தமிழக முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.  அப்போது தமிழ்நாடு கூட்டுறவு சர்க்கரை ஆலை இணைய தலைவர் இராஜசேகர், நகர செயலாளர் பாபு, ஒன்றிய செயலாளர்கள் தேவேந்திரன், இராஜேந்திரன், கிருஷ்ணமூர்த்தி, அய்யம்பெருமாள் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.