கரூர், ஜூலை 9 - கரூர் மாவட்டம் காந்திகிராமம் அருகே உள்ள வடக்குப்பாளையத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. வடக்குபாளையம் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பயணியர் நிழற்குடை இருந்தது. இந்த நிழற்குடை தனக்கு சொந்தமான இடத்தில் இருப்பதாகக் கூறி அதே பகுதியைச் சேர்ந்த ஒருவர் கடந்த 15 நாட்களுக்கு முன் நிலத்தை சீரமைத்தார். அப்போது நிழற்குடையை இடித்து அகற்றியுள்ளார். இதனை கண்ட கிராம மக்கள் நிழற்குடை இருந்த இடத்திலேயே மீண்டும் நிழற்குடையை கட்டித்தர வேண்டும் என கோரி திருச்சி - கரூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த அப்பகுதி ஊராட்சி நிர்வாகத்தினர், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், நிழற்குடை இரண்டு வாரத்திற்குள் மீண்டும் கட்டித் தரப்படும் என உறுதியளித்ததையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். தற்போது, இரண்டு வாரமாகியும் நிழற்குடையை கட்டி கொடுக்காததால் வடக்குப்பாளையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராம மக்கள், கரூர் - திருச்சி சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் நடத்தினர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த, கரூர் நகர துணைக் காவல் கண்காணிப்பாளர் தேவராஜ் மற்றும் கரூர் வட்டாட்சியர் பன்னீர்செல்வம், வட்டார வளர்ச்சி அலுவலர் பாலச்சந்திரன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், ஏற்கனவே நிழற்குடை இருந்த இடத்தின் அருகே தனியாரின் நிலத்தையும் அளந்து, அவரது இடத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில், மீண்டும் நிழற்குடை அமைத்து தரப்படும் என உறுதியளித்ததையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.