districts

தோகைமலை ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் பற்றாக்குறை: மக்கள் அவதி

கரூர், டிச.7 - கரூர் மாவட்டம் தோகைமலை நகரத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் 30 படுக்கைகள் உள்ளன. மேலும் 8 மருத்துவர்கள் பணியாற்ற வேண்டிய மருத்துவமனையில், தற்போது 3 மருத்துவர்கள் மட்டுமே பணியாற்றி வருகிறார்கள். தோகைமலை, கழுகூர், சின்னியம்பாளையம், நாகனூர், கீழவெளியூர், பாதிரிப்பட்டி, பில்லூர், பொருந்தலூர், புத்தூர் ஆகிய ஊராட்சிகளில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட குக்கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள், இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை நம்பித்தான் வாழ்ந்து வருகின்றனர். இம்மருத்துவமனையில் கர்ப்பிணிகளுக்கு ஸ்கேன் எடுத்தல், ரத்தப் பரிசோதனை, எக்ஸ்ரே ஆகிய வசதிகள் மட்டுமே உள்ளன. இந்த சுகாதார நிலையத்திற்கு மாதந்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட கர்ப்பிணி தாய்மார்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். பிரசவத்தின் போது கர்ப்பிணிகளுக்கு சிகிச்சை வழங்க போதிய வசதிகள் இல்லாததால், அவர்களின் உயிருக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது. இப்பகுதியில் அதிக விபத்துகள், விஷக்கடி ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு அவசர சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு முதலுதவி மட்டும் வழங்கி, மேல் சிகிச்சைக்கு திருச்சி, மணப்பாறை, கரூர், குளித்தலை ஆகிய மருத்துவமனைகளுக்கு அனுப்பி விடுகின்றனர். இதனால் பொதுமக்களுக்கு வீண் அலைச்சலும், செலவும் ஏற்படுகிறது.  எனவே, ஏழை, எளிய மக்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்க கரூர் மாவட்ட நிர்வாகம், சுகாதாரத் துறையினர், தோகைமலை ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தோகைமலை ஒன்றியக் குழு உறுப்பினர் ஏ.சுப்பிரமணியன் கோரிக்கை வைத்துள்ளார்.