கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடையில், நாட்டில் அமைதியை சீர்குலைத்து, மதக்கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக அகில பாரத இந்து மகா சபா மாநில தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகே உள்ள ஒரு கோவில் திருவிழாவில் கடந்த 17-ம் தேதி கலந்து கொண்ட அகில பாரத இந்து மகா சபா மாநிலத் தலைவர் பாலசுப்ரமணியம் கோயில் நிகழ்ச்சிகள் முடிவடைந்த நிலையில் அங்குள்ள உள்ளரங்கத்தில் உரையாற்றியுள்ளார். அப்போது கேரளா மாநிலத்தில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் படுகொலை சம்பவத்தை மேற்கோள் காட்டி இந்துக்களை பாதுகாப்பது நமது கடமை என்றும் கேரளாவில் ஒருவரை வெட்டினால் இன்னொருத்தரை வெட்டுவார்கள். என்றும் மேலும் மதக்கலவரத்தை தூண்டும் விதமாக பேசியுள்ளார்..
இது தொடர்பாக புதுக்கடை காவல் நிலைய உதவி கண்காணிப்பாளர் (சிறப்பு) ரத்தினதாஸ் நாட்டின் அமைதிக்கு சீர்குலைப்பதாக புகார் அளித்துள்ளார்.
இதனையடுத்து பாலசுப்பிரமணியம் மீது இரண்டு பிரிவுகளில் கீழ் வழக்கு பதிவு செய்த புதுக்கடை காவல்துறையினர் அவரை இன்று அதிகாலை ஈத்தாமொழியில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட பாலசுப்பிரமணியத்தை குழித்துறை அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்குக் காவல்துறையினர் கொண்டு சென்ற நிலையில் தகவலறிந்து அங்கு வந்த தொண்டர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு ஆர்பாட்டம் நடத்தியுள்ளனர்.
அதைத் தொடர்ந்து காவல்துறையினர் அவரை குழித்துறை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.