காட்டுமன்னார்கோவில், மார்ச் 1- கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடி ஆகும். இந்த ஏரியால் சுமார் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது. மேலும் ராட்சத குழாய் மூலம் சென்னை நகர மக்களுக்கு தாகத்தைத் தீர்ப்பதில் வீராணம் ஏரி முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த ஏரிக்கு மேட்டூர் அணை, பருவகாலங்களில் பெய்யும் மழையின் மூலம் தண்ணீர் வரத்து அதிகரிக்கும். கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததால் 3 முறை ஏரி நிரம்பியது. இந்த தண்ணீரை வைத்து நெல் அறுவடை முடிந்துள்ளது. தற்போது உளுந்து சாகுபடி செய்யப்பட்டுள்ளது. என்றாலும் வீராணம் ஏரியின் கடைமடை பகுதியான வல்லம்படுகை, சேத்தியாத்தோப்பு, சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் தற்போது நெல் சாகுபடி அறுவடை செய்யப்படாமல் உள்ளது. பச்சைபசேல் என்று பயிர்கள் உள்ளதால் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி தற்போது கடைமடை சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதனால் ஏரியின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு 44 அடியாக இருந்த நீர்மட்டம் செவ்வாயன்று 42.09 அடியாக உள்ளது. ஏரிக்கு 818 கனஅடி நீர் வருகிறது. சென்னை மாநகர் குடிநீருக்காக 63 கனஅடி நீர் திறந்துவிடப்படுகிறது. நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.