கடலூர், ஏப். 24 - கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே வீராணம் ஏரி உள்ளது. 47.50 அடி கொள்ளளவு கொண்ட இந்த ஏரியிலிருந்து சுமார் 45 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் பாசனம் பெறுகிறது. இந்த ஏரியிலிருந்து ராட்சத குழாய் மூலம் சென்னை மாநகர மக்களுக்கு தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. பருவகாலங்களில் பெய்யும் மழை, மேட்டூர் அணை மூலம் இந்த ஏரிக்கு தண்ணீர் வரத்து உள்ளது. கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையின்போது வீராணம் ஏரி 3 முறை நிரம்பியது. கடந்த சில நாட்களாக வீராணம் ஏரி பகுதியில் வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. இதன்காரணமாக ஏரியின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. ஏரியின் நீர்மட்டம் ஏப். 23 அன்று 42.50 அடியாக இருந்தது. ஞாயிறன்று (ஏப்.24) 42.45 அடியாக குறைந்துவிட்டது. ஏரிக்கு நீர்வரத்து 241 கனஅடியிலிருந்து 181 கன அடியாக குறைந்துள்ளது. அதேநேரம் சென்னை நகரின் குடிநீருக்காக 61 கன அடி தண்ணீர் அனுப்பப்படுகிறது.