கடலூர், டிச.6- கடலூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் நிவாரணத் தொகை மற்றும் நிவாரண பொருட்களை வழங்கினார்.
பெஞ்சல் புயல் மற்றும் தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் 2 ஆயிரம் ரூபாய் நிவாரணம் மற்றும் அரிசி பருப்பு நிவாரண பொருட்கள் வழங்கப்படும் என தமிழ்நாடு முதல்வர் அறிவித்தார்.
அதன்படி, வெள்ளிக்கிழமை(டிச.6) நியாய விலை கடை பணியாளர்கள் மூலம் வீடு வீடாகச் சென்று டோக்கன் விநியோகம் செய்யப்பட்டது. குண்டு உப்பலவாடி பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாநில அரசின் நிவாரணத் தொகை மற்றும் நிவாரண பொருட்களை அமைச்சர் எம் ஆர்.கே.பன்னீர்செல்வம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார், சட்டமன்ற உறுப்பினர் கோ.ஐயப்பன், மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் பா.தாமரைச் செல்வன், கூட்டுறவுத்துறை வருவாய் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.