கடலூர், நவ.27- வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிரமடைந்து ஃபெங்கல் புயல் உருவாகியுள்ளது. இப்புயல் காரணமாக கடலூர் மாவட்டத்திற்கு கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரை பகுதி யில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது.
கடல் சீற்றம்..
வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாகியுள்ள காரணத்தால் கடலூர் மாவட்ட கடற்கரையோரப் பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. வழக்கமாக கடற்கரையில் சுமார் 3 அடி உயரம் மட்டுமே அலை எழும் நிலையில், தற்போது, புயல் காரணமாக சுமார் 10 அடி உய ரத்திற்கும் மேல் அலைகள் எழுந்து சீற்றத்துடன் காணப்படுகிறது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
கடலூர் மாவட்ட கடற்கரையோரப் பகுதியில் தாழங்குடா, தேவனாம்பட்டி னம், சிங்காரத்தோப்பு, சொத்திக் குப்பம் என 49 மீனவர் கிராமங்கள் உள்ளன. வங்கக் கடலில் காற்ற ழுத்தத் தாழ்வு மண்டலம் உருவான தையடுத்து, மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அறி விப்பையொட்டி கடந்த சில நாட்களாகவே மீனவர்கள் தொழில் செய்ய கடலுக்குச் செல்லவில்லை. மேலும், மீனவர்கள் தங்கள் படகுகள் மற்றும் வலை உள்ளிட்ட மீன்பிடி உப கரணங்களை பாதுகாப்பான இடத்தில் வைத்துள்ளனர்.
3ம் எண் புயல் கூட்டு ஏற்றம்
வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபெங்கல் புயல் காரணமாக கடலூர் துறைமுகத்தில் 3ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதற்கு திடீர் காற்றோடு மழை பொழியும் வானிலையால் துறை முகம் அச்சுறுத்தப்பட்டுள்ளது என்று பொருள்.
பேரிடர் மீட்பு படையினர் வருகை
கடலூர் மாவட்டத்தில் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக செவ்வாயன்று காலை முதல் கனமழை பெய்தது. கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர் மாவட்டத்திற்கு உதவி ஆய்வாளர் சஞ்சீவ் தேஸ்வால் தலைமையில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படைக்குழுவினர் 25 பேரும், உதவி ஆய்வாளர் ராஜ கோபால் தலைமையிலான மாநில பேரிடர் மீட்பு குழுவினர் 25 பேர் கடலூர் வருகை தந்துள்ளனர்.
தயார் நிலையில் மீட்புப்படையினர்
கடலூர் மாவட்டத்தில் உள்ள 16 தீயணைப்பு நிலையங்களில் பணியில் உள்ள 270 மீட்புப்படை வீரர்கள் மற்றும் நீச்சல் வீரர்கள் கன மழை மீட்புப் பணியில் ஈடுபட மீட்பு உப கரணங்களுடன் தயார் நிலையில் உள்ளனர். கடலூர் தீயணைப்பு நிலைய அலுவலகத்தில் 4 மீட்பு படகு கள், பாதுகாப்பு கவச உடைகள், மரம் அறுக்கும் இயந்திரங்கள், கயிறு, ஜெனரேட்டர் மூலம் இயங்கும் ஒளிரும் விளக்குகள் உள்ளிட்ட பல்வேறு உபகரணங்களுடன் மீட்பு பணிக்கு வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர்.
வடக்குத்தில் 108 மி.மீ மழை
கடலூர் மாவட்டத்தில் புதன்கிழமை காலை 8.30 மணி வரையில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வடக்குத்தில் 108 மி.மீ மழை பதிவானது. மாவட்டத்தின் பிறப்பகுதிகளில் பதிவான மழை அளவு விவரம்: கடலூர் ஆட்சியர் அலுவலகம் 97.6, கடலூர் 97, அண்ணாமலை நகர் 76.2, வானமாதேவி, பரங்கிப்பேட்டை தலா 68, சிதம்பரம் 63.2, காட்டுமன்னார்கோயில் 61.4, எஸ்.ஆர்.சி குடிதாங்கி 56, லால்பேட்டை 52.8, ஸ்ரீமுஷ்ணம் 51.3, பண்ருட்டி 50, சேத்தியாத்தோப்பு 49.6, புவனகிரி 49, கொத்தவாச்சேரி 44, குறிஞ்சிப்பாடி 39, குப்பநத்தம் 38.2, விருத்தாசலம் 36, மே.மாத்தூர் 34, வேப்பூர் 33, பலாந்துறை 31.3, கீழச்செருவாய் 30.6, காட்டுமயிலூர் 30, லாக்கூர் 28, தொழுதூரில் 25 மில்லி மீட்டர் மழை பதிவானது.
தயார் நிலையில் மாவட்ட நிர்வாகம்
கடலூர் மாவட்டம் எப்போதும் இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்படக்கூடிய மாவட்டம். அந்த வகையில் பாதிப்பு குறித்த தகவல்கள் அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.