districts

சிறுமியைக் கடத்தி திருமணம்: இளைஞருக்கு 10 ஆண்டு சிறை

கடலூர், மார்ச் 1- சிறுமியைக் கடத்தி திருமணம் செய்த இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடலூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள சாத்தநத்தத்தைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி செந்தில்குமார் (எ) அசோக்குமார் (33). இவருக்கு திருமணமாகி 3 பெண் குழந்தைகள் உள்ளனர். அதே பகுதியை சேர்ந்த 16 வயது மாணவியை தனக்கு திருமணமாகவில்லை எனக் கூறி காதலித்துள்ளார்.  பின்னர், அவரை ஏமாற்றி கடத்திச் சென்று 7.11.2019 அன்று திருமணம் செய்து கொண்டு அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து திட்டக்குடி அனைத்து மகளிர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கின் விசாரணை கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நீதிபதி எம்.எழிலரசி தீர்ப்புக் கூறினார். அதில் செந்தில்குமாருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ. 5 லட்சம் இழப்பீட்டுத் தொகையாக மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் சமூக நலத்துறையிடமிருந்து பெற்று வழங்க வேண்டும். அதேபோல் தண்டனை பெற்றவருக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளதால் அவர்களின் எதிர்காலம் கருதி அரசின் நலத்திட்ட உதவிகள் அவர்களுக்கு கிடைப்பதை மாவட்ட நிர்வாகம் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் தீர்ப்பில் குறிப்பிட்டார். இதையடுத்து செந்தில்குமார் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

;