கடலூர்,ஜூலை 13- கடலூர் மாவட்டம், கம்மாபுரம் ஒன்றியம், முதனை கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பழங்குடியினத்தைச் சேர்ந்த ராஜாக்கண்ணு-பார்வதி தம்பதியினர்.
1993 ஆம் ஆண்டு கம்மாபுரம் காவல்நிலையத்தினர் திருட்டு வழக்கு ஒன்றில் விசாரணை என்ற பெயரில் ராஜகண்ணுவை அழைத்துச் சென்றனர். காவல் நிலையத்தில் அடித்து சித்தரவதை செய்ததில் அவர் உயிரிழந்தார். இதை மறைப்பதற்கு வேறு மாவட்ட எல்லையில் ராஜா கண்ணுவின் உடலை வீசி விட்டு வந்தனர்.
மேலும், முதனை கிராமத்தில் வசித்து வந்த பழங்குடி மக்கள் பலரையும் துன்புறுத்தியும் சித்தரவதை செய்தனர். இந்த விவகாரம் மார்க்சிஸ்ட் கட்சிக்கு தெரிய வந்ததும் சட்டப் போராட்டத்துடன் களப் போராட்டத்தையும் நடத்தியது. அதன் விளைவாக, 2004 இல் ராஜாக்கண்ணுவை சித்தரவதை செய்து கொலை செய்த காவல்துறையை சேர்ந்த 5 பேருக்கு நீதிமன்றம் 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. இந்தச் சம்பவம் நடைபெற்று 30 ஆண்டுகள் கடந்துவிட்டது.
ராஜா கண்ணு-பார்வதி தம்பதியின் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு ‘ஜெய் பீம்’ என்ற பெயரில் திரைப்படமாக்கி தானும் நடித்தார் திரைக்கலைஞர் சூர்யா. இந்த படம் திரைக்கு வந்த பிறகுதான், மார்க்சிஸ்ட் கட்சியின் நீண்ட நெடிய போராட்டமும், போராட்டத்தில் பங்கேற்ற களப்போராளிகள் குறித்த தகவல்களும் வெளி உலகத்திற்கு தெரிய வந்தது.
இந்த திரைப்படத்தின் உண்மை கதாநாயகன் ராஜாக்கண்ணு அவரது மனைவி பார்வதி மற்றும் மார்க்சிஸ்ட் கட்சிக்கு பாராட்டுக்கள் குவிந்தன.
இந்த நிலையில், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணனின் பரிந்துரையை ஏற்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முதனை கிராமத்தில் பார்வதிக்கு வீடு கட்டி கொடுக்கப்படும் என்று அறிவித்தார். ஆனால் அதற்கான பணிகள் நடைபெறவில்லை. சொந்தமாக வீடு இல்லாமல் அக்கம் பக்கம் உள்ளவர்கள் வீட்டில் பார்வதி தங்கியிருந்தார்.
இந்த நிலையில், சிபிஎம் மாவட்டச்செயலாளர் கோ.மாதவன், ராஜாக்கண்ணுவின் காவல் நிலைய படுகொலை சம்பவத்தில் முன் நின்று போராட்ட களம் கண்ட கோவிந்தன் ஆகியோர் கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜை சந்தித்து, பழங்குடியின மக்களுக்கான வீடு கட்டும் திட்டத்தின்கீழ் பார்வதிக்கு வீடு கட்டி கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை மனு கொடுத்தனர்.
அதைத் தொடர்ந்து, முதனை கிராமத்தில் பார்வதிக்கு வீடு கட்டி கொடுப்பதற்கு 4.60 லட்சம் ரூபாய் மாவட்ட ஆட்சியர் ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டார். தற்போது கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. வீடு என்ற கனவு நிறைவேறியதால் மார்க்சிஸ்ட் கட்சி தலைவர்கள், முதலமைச்சர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அனைவருக்கும் பார்வதியம்மாள் நன்றி தெரிவித்துள்ளார்.