விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் வட்டத்திற்கு உட்பட்ட செவலபுரையில் அரசு புறம்போக்கு இடத்தில் சுமார் 60 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வரும் குடியிருப்பை நீதிமன்ற உத்தரவை காட்டி இடிக்க வந்த அதிகாரிகளை சிபிஎம் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டு திருப்பி அனுப்பினர்.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் வட்டத்திற்கு உட்பட்ட செவலபுரை கிராமத்தில் குளத்துமேடு அரசு புறம்போக்கு கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக சுமார் 93 குடும்பத்தினர் வீடு கட்டி நிரந்தரமாக குடியிருந்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்து அறநிலைத்துறை தமிழகத்தில் அரசு புறம்போக்கு இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை நீதிமன்ற உத்தரவுப்படி அகற்றி வருகின்றனர் அதனால் இங்கு குடியிருக்கும் மக்களை வெளியேற்றி ஆக்கிரமிப்பை அகற்றும் முயற்சியில் மேல்மலையனூர் வட்டாட்சியர் கோவர்தன் தலைமையில் வட்டார வளர்ச்சி அலுவலர் சிலம்பு செல்வன்,காவல் ஆய்வாளர் சுரேஷ்பாபு மற்றும் அதிகாரிகள், போலீசார் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அதனை எதிர்த்து விழுப்புரம் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் என். சுப்பிரமணியன் தலைமையில் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் சிபிஎம் கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து வீடுகளை இடிக்க வந்த அதிகாரிகள் எடுத்து வந்த ஜேசிபி வாகனங்களை மறித்து சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
உடனடியாக விரைந்து வந்த கூடுதல் ஆட்சியர் அமித், செஞ்சி டிஎஸ்பி பிரியதர்ஷினி ஆகியோர் தர்ணாவில் ஈடுபட்டிருந்த சிபிஎம் மாவட்ட செயலாளர் என்.சுப்பிரமணியன் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது வீடு வாசல் இல்லாமல் தான் அரசு புறம்போக்கு இடங்களில் குடியேறி உள்ளனர். அவர்களுக்கு அந்த இடத்தை இடிக்காமல் உடனடியாக பட்டா வழங்க வேண்டும், இல்லையேல் மாற்று இடம் வழங்கி விட்டு இடிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர், ஆனால் அந்த கோரிக்கைகளை அதிகாரிகள் ஏற்க மறுத்தனர். இதனால் அப்பகுதியில் பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது, இந்நிலையில் சிபிஎம் கட்சியின் கோரிக்கையை ஏற்று பகல் 12 மணி வரை இடிக்கும் முயற்சியை நிறுத்தி வைத்தனர், அதனால் ஒருவித பதட்டமான சூழ்நிலை உருவாகியது. அதன் பின்னர் அதிகாரிகள் கொடுத்த காலக்கெடு முடிவடைந்த நிலையில் சிபிஎம் கட்சியினர் பாதிக்கப்பட்ட அம்மக்களுக்கு மாற்று இடம் கொடுத்து விட்டு குடியிருப்பை இடிக்க வேண்டும் என கோரிக்கை வலியுறுத்தினர். ஆனால் வட்டாட்சியர் கோவர்த்தனன், வட்டார வளர்ச்சி அலுவலர் சிலம்பு செல்வன் ஆகியோர் தலைமையிலான அதிகாரிகள் வளத்தி காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் துணையோடு 100 க்கும் மேற்பட்ட அதிரடி போலீசார் சிபிஎம் கட்சி நிர்வாகிகள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களையும் அத்துமீறி கைது செய்தனர். அதன் பின்னர் வீடுகளை இடித்தனர், பாதிக்கப்பட்ட மக்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.
இந்நிலையில் சரியாக ஒரு மணி அளவில் வீடுகளை இடிக்க வேண்டாம் என உத்தரவு கிடைத்ததை அடுத்து அதிகாரிகள் வீடுகளை இடிப்பதை நிறுத்தி விட்டு சென்றனர் .பின்னர் கைது செய்யப்பட்ட சிபிஎம் கட்சி மாவட்ட செயலாளர் என்.சுப்பிரமணியன் தலைமையிலான நிர்வாகிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட்டனர், அதனையடுத்து மாவட்ட செயலாளர் என்.சுப்பிரமணியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வி.ராதாகிருஷ்ணன்,ஆர்.டி.முருகன், மேல்மலையனூர் வட்ட செயலாளர் டி.முருகன், மாவட்ட குழு உறுப்பினர் எழில்ராஜா, மூத்த உறுப்பினர் உதயகுமார், வாலிபர் சங்க வட்ட செயலாளர் ஹரிஹரகுமார், வட்ட குழு உறுப்பினர்கள் ரவி, சுப்பிரமணியன், ஏழுமலை,கார்த்தி, கிளை செயலாளர் கே.துரைசாமி உட்பட்ட சிபிஎம் கட்சியினர் 50 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர், மேலும் இடிக்கப்பட்ட வீடுகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.