கடலூர்,ஜூலை 19- கடலூர் மாவட்டம் திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல வேண்டும் என்று சிபிஎம் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து மாவட்டச் செயலாளர் கோ. மாதவன் திருச்சி ரயில்வே கோட்ட மேலாளருக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- கொரோனா பொது முடக்கத்திற்கு பிறகு முறையாக ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதற்கு முன்பு திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்தில் நின்று சென்ற மன்னார்குடி (16179, 16180), காரைக்கால் விரைவு ரயில்கள் (16175, 16176) தற்போது நிற்பதில்லை. இதனால் இரவு நேரத்தில் சென்னை செல்லும் பயணிகள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள்.எனவே மீண்டும் திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்தில் நின்று செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும். அதேபோல், ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் (16851, 16852), உழவன் எக்ஸ்பிரஸ் (16865, 16866), திருப்பதி 16780 வண்டிகளும் கடலூர் முதுநகர் ரயில் நிலையத்தில் நின்று செல்வதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும், கன்னியாகுமரி- புதுச்சேரி 16862, மஹால் எக்ஸ்பிரஸ் 22623, 22624 ரயில்கள் கடலூரில் நின்று செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும். மயிலாடுதுறையிலிருந்து மைசூருக்கு இயக்கப்படும் ஜன்சாதப்தி விரைவு ரயில் 16231, 16232 கடலூர் துறைமுகம் வரை நீட்டிக்க வேண்டும், விழுப்புரம்-தாம்பரம் பாசஞ்சர் முதுநகர் வரை நீட்டிக்க வேண்டும். இவ்வாறு அந்த கடித்தில் தெரிவித்திருக்கிறார்.