districts

மழை வெள்ளத்தால் 3 தரைப்பாலம் 26 சிறிய பாலங்கள் சேதம்

கடலூர், டிச.6- கடலூர் மாவட்டத்தில்  பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால் 26 சிறிய பாலங்களும் 3 தரைப்பாலமும் சேதமடைந்துள்ளது. பெஞ்சல் புயல் மற்றும் தென்பெண்ணையாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் கடலூர், பண்ருட்டி வட்டங்களில் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். வீடுகளில் தண்ணீர் புகுந்ததால், உடைமைகளை இழந்து தவித்தனர்.

இதையடுத்து வெள்ளம் பாதித்த பகுதிகளில் வருவாய் துறை, ஊரக வளர்ச்சித் துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை, நெடுஞ்சாலைத் துறை, நீர்வளத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள், ஊழியர்கள் முகாமிட்டு, தண்ணீரை வடிய வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், வெள்ள சேத விவரங்களையும் அதிகாரிகள் கணக்கெடுத்து வருகின்றனர். அதன்படி வெள்ளத்தால் கடலூர் மாவட்டத்தில் 83 கிலோமீட்டர் சாலைகள் சேதமடைந்து உள்ளன. தற்போது 68 கிலோ மீட்டர் தூரம் உள்ள சாலைகள் சீரமைக்கப்பட்டு, போக்குவரத்து தொடங்கி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சாலைகளில் விழுந்து கிடந்த 28 மரங்களை நெடுஞ்சாலைத் துறையினர் வெட்டி அப்புறப்படுத்தி உள்ளனர். இதுதவிர தென்பெண்ணையாறு, மலட்டாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பல்வேறு பகுதிகளில் மண் அரிப்பு ஏற்பட்டு, 26 சிறிய பாலங்கள், 3 தரைப்பாலங்கள் சேதமடைந்தன.

அவற்றை சீரமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. தொடர்ந்து பயிர்கள் சேதம் குறித்தும் வேளாண்மை அதிகாரிகள் கணக்கெடுத்து வருகின்றனர். முன்னதாக சேதமடைந்த சாலைகளை கடலூர் மாவட்ட சிறப்பு கண்காணிப்பு அதிகாரி ககன்தீப் சிங் பேடி, மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ஆகியோர் பார்வையிட்டு, பணிகளை துரிதப்படுத்தி வருகின்றனர்.