districts

img

மலைவாழ் மக்கள் போராட்டத்தின் எதிரொலி

உடுமலை, ஜூலை 7- திருமூர்த்திமலை முதல் குரு மலை வரை சாலை அமைக்கும் பணி குறித்து மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் ஞாயிறன்று நேரில் ஆய்வு செய்தார்.

திருப்பூர் மாவட்டம், உடுமலை தாலூகாவிற்குட்பட்ட மலைவாழ் மக்கள் குடியிருப்பு பகுதிகளுக்கு சாலை வசதி இல்லாததால், கல்வி, மருத்துவ தேவை மற்றும் மலையில் விளையும் பொருட்களை சந்தைப்படுத்த முடியாத நிலை இருந்து வருகிறது. 

எனவே, அனைத்து மலை வாழ் மக்கள் குடியிருப்பு பகுதி களுக்கும் சாலை அமைத்துத்தர வேண்டும் என வலியுறுத்தி, கடந்தாண்டு தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கத்தின் தலைமை யில் அப்பகுதி பொதுமக்கள் உடுமலையில் உள்ள  மாவட்ட வனத்துறை அலுவலகத்தை முற்று கையிட்டு, காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதன் விளைவாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் வனத்துறை அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள் மற்றும் மலை வாழ் மக்கள் சங்கத்தின் நிர்வாகிகள் கலந்து கொண்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. 

ஒப்பந்தம்

அதில் முதற்கட்டமாக திரு மூர்த்திமலையில் இருந்து குரு மலை மலைவாழ் மக்கள் குடியிருப்பு பகுதிக்கு செல்லும் வகையில் சாலை அமைக்கவும், பின்னர் அனைத்து குடியிருப்புப் பகுதிகளுக்கும் செல்லும் வகையில் சாலை அமைக்க ஆய்வு செய்து உடனடியாக நடைமுறைப்படுத்தப்படும் என்று வர லாற்று சிறப்புமிக்க ஒப்பந்தம் ஏற்பட்டது. இந்த ஒப்பந்தப்படி தளி  பேரூராட்சி மன்றத்தில் திருமூர்த்தி மலையில் இருந்து குருமலை வரை சாலை அமைக்க தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. பின்னர் அரசு சட்டப்படி ஒப்பந்தம் விடப்பட்டு வேலை துவங்கியது.

வனச்சரகர் இடமாற்றம்

இந்நிலையில், வனப்பகுதியில் கனரக இயந்திரங்களை பயன் படுத்தி சாலை அமைக்கக்கூடாது என்று வனத்துறை அதிகாரிகள் சாலை அமைக்கும் பணியை நிறுத்தி னர். இதன்பின் மலைவாழ் மக்கள் தங்களின் உடல் உழைப்பின் மூலம் சாலை அமைக்க முயன்றபோது, இல்லாத சட்ட விதிகளைச் சொல்லி  சாலை வேலையை நிறுத்தி வைக்க மலைவாழ் மக்கள் மீது வனத்துறை யினர் தாக்குதல் நடத்தினர். சட்ட விரோதமாக செயல்படும் வனச்சரகர் சிவக்குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மலைவாழ் மக்கள் சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தமிழக முதல்வர் மற்றும் மாவட்ட ஆட்சியருக்கு மனு அனுப்பினர்.

இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் தமிழக அரசின் திட்டங்களை முடக்கி, பொய் வழக்குகள் பதிவு செய்த வனச்சரகர் சிவக்குமார் உடு மலை பகுதியில் இருந்து மாற்றப்பட்ட நிலையில், ஏற்கனவே தொடங்கி நடைபெற்ற வேலைகள் குறித்தும், இப்பகுதியில் செய்ய வேண்டிய வேலைகள் குறித்தும் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் ஞாயிறன்று ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வில் மாவட்ட வனத்துறை அலுவலர் குமார் மீனா, தளி பேரூராட்சித் தலைவர் உதயகுமார், பேரூராட்சி துணைத்
தலைவரும், மலைவாழ் மக்கள் சங்க மாநில துணைத்தலைவருமான கோ.செல்வன், பேரூராட்சி செயல் அலுவலர், உடுமலை வனத்துறை அதிகாரிகள் மற்றும் மலைவாழ் மக்கள் சங்கத்தின் நிர்வாகிகள் குப்புசாமி, செந்தில்குமார் ஆகி யோர் கலந்து கொண்டனர்.