அரியலூர், மார்ச் 24- அரியலூர் மாவட்டத்தில் அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்டக் கண்காணிப்பு அலுவலர் ரமேஷ் சந்த் மீனா ஆய்வு செய்தார். செந்துறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து பார்வையிட்டு ஊராட்சிகளில் மேற்கொள்ளப்படும் பணிகள், பணிகளின் எண்ணிக்கை, நிதி ஒதுக்கீடு, செலவுத்தொகை, முடிவுற்ற பணிகள், நடைபெறும் பணிகள், அலுவலகக் கோப்புகள், பதிவேடுகள் போன்ற பல்வேறு பணிகளையும் ஆய்வு செய்தார். செந்துறை, ரெட்டிப்பாளையம், வி.கைகாட்டி, அஸ்தினாபுரம், வாலாஜாநகரம் ஆகிய பகுதிகளில் ரூ.61.93 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகளை ஆய்வு செய்தார். அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்டத்தில் அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசின் திட்டங்கள் மற்றும் அதன் முன்னேற்றம் குறித்தும் சம்மந்தப்பட்ட துறை அலு வலர்களிடம் கேட்டறிந்து ஆய்வு செய்தார். ஆய்வின் போது, மாவட்ட ஆட்சியர் பெ.ரமண சரஸ்வதி, மாவட்ட வருவாய் அலுவலர் ச.கலைவாணி, வேளாண் இணை இயக்குநர் பழனிசாமி, பொது சுகாதார துணை இயக்குநர் கீதாராணி மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் உடனிந்தனர்.