அரியலூர், அக்.9 - 108 ஆம்புலன்ஸ் மேலாளர் அறிவுக்கரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: அரியலூர் மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் தற்போது வரை சுமார் 2 லட்சத்து 20 ஆயிரத்திற்கும் மேலானோர் பயன்பெற்றுள்ளனர். 2008 ஆம் ஆண்டு தமிழக மக்களின் அவசர மருத்துவ பயன்பாட்டிற்காக தொடங்கப்பட்ட 108 ஆம்புலன்ஸ் சேவையானது, பொதுமக்களின் பயன்பாட்டுக்கு ஏற்ப, படிப்படியாக ஆம்புலன்ஸ்களின் எண்ணிக்கையை உயர்த்தி தற்போது தமிழகம் முழுவதும் 1353 ஆம்புலன்ஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் அரியலூர் மாவட்டத்தில் மொத்தம் 19, 108 ஆம்புலன்ஸ் அவசர ஊர்திகள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் அடிப்படை உயிர் காக்கும் கருவிகள் கொண்ட ஆம்புலன்ஸ்கள் 16, இரண்டு அதிநவீன உயிர்க்காக்கும் வசதிகள் கொண்ட ஆம்புலன்ஸ்களும், ஒரு பச்சிளம் குழந்தைகளுக்கு உண்டான ஆம்புலன்சும் இயக்கப்பட்டு வருகிறது, அரியலூர் மாவட்டத்தில் சேவை துவக்கப்பட்ட நாள் முதல் தற்போது வரை மொத்தம் 2,26,756 பேர் பயன்பெற்றுள்ளனர். இதில் பிரசவ தேவைக்காக 63,105 பேரும், சாலை விபத்துகளில் 29,791 பேரும், இதர மருத்துவ அவசர தேவைக்காக 1,33,860 பேரும் இச்சேவையை பயன்படுத்தி உள்ளனர். இதில் முக்கியமாக பிரசவத்திற்காக அழைக்கப்பட்டவர்களில் 544 தாய்மார்களுக்கு அவசர மருத்துவ உதவியாளரின் துரித நடவடிக்கையால் அவசர ஊர்தியிலேயே பிரசவித்துள்ளனர். பின்னர் அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவ்வாறு அரியலுார் மாவட்டத்தில் மட்டும் மொத்தம் 2,26,756 பேர் பயன்பெற்றுள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.