districts

img

தேசிய கல்விக் கொள்கை: பல்வேறு மாநிலங்களில் மிரட்டி கையெழுத்து வாங்கி உள்ளனர்

திருச்சிராப்பள்ளி, பிப்.22-  திருச்சி தென்னூரில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் துரை.வைகோ எம்.பி. செய்தியாளர்களுக்கு வெள்ளிக்கிழமை அன்று பேட்டியளித்தார்.  அப்போது அவர் கூறியதாவது:- ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திரபிரதான், மாணவர்கள் விஷயத்தில் அரசியல் செய்யக்கூடாது என்று கூறியுள்ளார். மாணவர்களின் கல்வி விஷயத்தில் பாஜக ஒன்றிய அரசுதான் அரசியல் செய்கிறது. தமிழ்நாடு பள்ளி கல்வித்துறைக்கு ரூ.2400 கோடிக்கு மேல் தமிழகத்திற்கு பணம் வர வேண்டி உள்ளது. அரசு பள்ளி ஆசிரியருக்கு சம்பளம், பள்ளி பராமரிப்பு விளிம்பு நிலையில் உள்ள மாணவர்களுக்கு தரமான கல்வி தர வேண்டும் என்ற திட்டத்தின் கீழ் இலவச கல்வி கொடுப்பதற்கு அந்த பள்ளிகளுக்கு வேண்டிய அரசு கொடுக்க வேண்டிய நிதியை கொடுக்க முடியவில்லை. தேசிய புதிய கல்விக் கொள்கையில் தமிழகம் முழுவதுமாக உடன்பட வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். இதில், நமக்கும், அவர்களுக்கும் உடன்பாடு இல்லை. மும்மொழி கொள்கையை தமிழக அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும் என கூறுகின்றனர்.  தமிழகத்தில் காலம் காலமாக இரு மொழிக் கொள்கைகள் உள்ளது என தமிழக அறிவிக்கிறது. சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்தில் உள்ள அனைத்து வரைமுறைகளையும் தமிழக கல்வித்துறை செயல்படுத்தி வருகிறது.  எனவே, அந்தத் திட்டத்திற்கான நிதியை தரவேண்டும். இந்தத் திட்டத்தையும் தேசிய கல்விக் கொள்கை ஏன் ஒன்று சேர்க்கிறீர்கள். இந்த திட்டத்திற்கான இதை ஏன் நிறுத்துகிறீர்கள் என்பதுதான் தமிழக முதல்வரின் கேள்வியாக இருக்கிறது. இருமொழிக் கொள்கையால் தான் தமிழகம் முன்னேற்றம் அடைந்துள்ளது. தேசிய கல்வித் திட்டத்தில் 3,5,8 வகுப்புகளில் தேர்வு கட்டாயமாக இருக்கும். இதனால் மாணவர்களுக்கு மனச்சுமை ஏற்படும். மத்திய அரசு 2047 இல் உயர் கல்விக்குச் செல்லும் சதவீதம், 50 ஆக வேண்டும் என கூறுகின்றனர். அதை தமிழகம் அடைந்துவிட்டது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்ள மிரட்டி கையெழுத்து வாங்கி உள்ளனர். முதல்வர் எழுதிய கடிதம் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். தற்போது கல்வி ஒத்திசை பட்டியலில் உள்ளது. நாங்கள் கொண்டு வந்துள்ளோம் நீங்கள் கையெழுத்து போட வேண்டும். கையெழுத்து போடாவிட்டால் நாங்கள் நிதி தர மாட்டோம் என தெரிவிக்கின்றனர். இதுதான் கூட்டாட்சிக்கு எதிரானது. தமிழகத்தில் 58 ஆயிரம் பள்ளிகளில் உள்ளன. இதில் 12000 தனியார் பள்ளிகள். இதில் சிபிஎஸ்சி பள்ளியில் எண்ணிக்கை 1800 உள்ளன. சிபிஎஸ்சி பள்ளியில் நிர்பந்தம் காரணமாக ஹிந்தி படிக்கின்றனர். மொழிகளைப் பொறுத்தவரை தமிழகத்தில் தாய் மொழி உள்ளது. ஆங்கிலமும் உள்ளது. தற்போது மூன்றாவது மொழி கொண்டு வந்தால் மாணவர்களின் சுமை அதிகமாகும். 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற அந்த மதிப்பெண்ணை வைத்து உயர்கல்விக்குச் செல்கின்றனர். இதற்கிடையில் எதற்காக நுழையத் தேர்வு. இவ்வாறு துரை வைகோ எம்.பி கூறினார். பேட்டியின் போது ம.தி.மு.க மாநில துணைப் பொதுச் செயலாளர் டாக்டர்  ரொகையா, மாவட்டச் செயலாளர்கள் வெல்லமண்டி சோமு, மணவை தமிழ் மாணிக்கம் ஆகியோர் உடன் இருந்தனர்.