திருவாரூர், ஜன.13- திருவாரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் (டாம்கோ மூலம் இஸ்லாமியர்கள், கிறித்துவர்கள், சீக்கியர்கள் புத்தமதத்தினர், பார்சீயர்கள் மற்றும் ஜெயின் பிரிவை சேர்ந்தவர்களும், டாம்செட்கோ (தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம்) மூலம் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகப்பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினர் இனத்தவர்களும் பொருளாதாரத்தில் மேம்பாடு அடையும் வகையில் வியாபாரம் மற்றும் இதர தொழில் செய்வதற்கு பல்வேறு கடன் உதவி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. கடன் உதவி பெறுவதற்கான தகுதிகளாக, தமிழ்நாட்டில் வசிக்கும் இனத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 60 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடன் உதவி வழங்கப்படும். 2022-2023 நிதியாண்டிற்கான கடன் வழங்கும் சிறப்பு முகாம் ஜனவரி 19 முதல் ஜனவரி 24 வரை நடைபெறவுள்ளது. முகாமில் விண்ணப்பத்துடன் சாதிசான்று நகல், வருமான சான்று நகல், இருப்பிட சான்று நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், கடன் பெறும் தொழில் திட்ட அறிக்கை முதலிய ஆவணங்களுடன் கீழ்கண்ட இடங்களில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் நடைபெறும் கடன் வழங்கும் சிறப்பு லோன் மேளாவில் பொது மக்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேலும் கடன் வழங்கும் சிறப்பு லோன் மேளாவில், ஜனவரி 19 அன்று திருவாரூர் வட்டம் அடியக்கமங்கலத்தில் காலை 10 மணிக்கும். நன்னிலம் டவுன் பகுதியில் காலை 12 மணிக்கும், ஜன.20 அன்று குடவாசல் டவுன் பகுதியில் காலை 10.30 மணிக்கும். வலங்கைமான் டவுன் பகுதியில் மாலை 2.30 மணிக்கும், ஜன.23 அன்று கூத்தாநல்லூர் டவுன் பகுதியில் காலை 10.30 மணிக்கும், வடுவூரில் மாலை 2.30 மணிக்கும். ஜன.24 அன்று மணலியில் காலை 10.30 மணி மணிக்கும், கோட்டூரிலும் நடைபெறவுள்ளது. மேலும் விபரங்களுக்கு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், திருவாரூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் நகர கூட்டுறவு வங்கியினை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ப.காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.