திருவண்ணாமலை, டிச. 27- திருவண்ணாமலை மாவட்டத்தில் கலசப்பாக்கம், புதுப்பாளையம், துரிஞ்சாபுரம் ஆகிய பகுதிகளில் சம்பா சாகுபடிக்கு பொன்னி நடவு செய்யப்பட்டது. தற்போது அறுவடை செய்யும் நிலையில் பல இடங்களில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. அறுவடை செய்வதற்கு ஏந்திரங்களும், தொழிலாளர்களும் கிடைக்காத நிலையில் அறுவடைப் பணிகளை விவசாயிகள் தொடங்காமல் உள்ளனர். இதனால் ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்கதிர்கள் நீரில் மூழ்கி நாசமானது. இதனால் விவசாயிகள் கவலைடைந்துள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், கலசப்பாக்கம் பகுதியில் எந்த தொழிற்சாலையும் கிடையாது. இதனால் வெளி மாநிலங்களில் சென்றுதான் வேலை பார்க்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. கொரோனா தாக்கத்தால் கடந்த 2 ஆண்டுகள் விவசாயிகள் கடும் நெருக்கடியை சந்தித்தனர். ஆறுதலாக சம்பா பருவம் கைகொடுக்கும் என நம்பினோம். தற்போது நெல்கொள்முதல் விலையும் சற்று அதிகரித்துள்ளது. இந்நிலையில் அறுவடைக்காலத்தில் மழை பெய்ததால் பயிர்கள் நீரில் மூழ்கின. கடந்த 2 ஆண்டுகளாக விவசாயம் பாதித்த பகுதிகளில் பயிர்க்காப்பீடு செய்தவர்களுக்கு மட்டுமே நிவாரணம் கிடைத்தது. அரசு தரப்பில் நிவாரண உதவிகள் அளிக்கப்படவில்லை. இதனால் விவசாயிகள் பெரிதும் கவலலையடைந்துள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் மூலம் பாதிப்புக்குள்ளான நெற் பயிர்களை கணக்கீடு செய்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.