தேனி அருகே யானை தந்தம் விற்க முயன்ற 10 பேர் கைது செய்யப்பட்டு 2 யானை தந்தங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தேனி மாவட்டம் பெரியகுளம் வத்தலக்குண்டு சாலையில் யானை தந்தங்கள் கடத்தி வரப்பட்டு விற்பனை செய்ய முயற்சிப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலின்படி தேவதானப்பட்டி வனத்துறை அதிகாரி மேவிட் ராஜ் தலைமையில் ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டது.
அப்போது சந்தேகிக்கும்படி இருந்தவர்களை வனத்துறையினர் சோதனை மேற்கொண்டதில் யானை தந்தங்களை கடத்தி பதுக்கி விற்க முயன்றது தெரியவந்தது. அதனைதொடர்ந்து யானை தந்தங்கள் பதுக்கி வைத்திருந்து விற்பனை செய்ய முயற்சித்த ஆண்டிபட்டி, உசிலம்பட்டி, தேவதானப்பட்டி பகுதியைச் சேர்ந்த 10 பேரை தேவதானப்பட்டி வனச்சரக வனத்துறையினர் கைது செய்தனர்.
இதையடுத்து கைது செய்யப்பட்டவர்களை தேவதானப்பட்டி வனச்சரக அலுவலகத்தில் வைத்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.