districts

img

பறவையின் இறகு சொன்ன கதை

உதயசங்கர்

 காற்று வீசியது. தரையில் கிடந்த ஒரு பறவையின் இறகைக் காற்று எழுப்பியது. அந்த இறகு லேசாகிப் பறந்தது.  அந்த இறகு மிகவும் சிறியது. லேசான காற்றிலும் உயரே பறக்கக் கூடியது. காற்று நின்றது.  மிதந்து கொண்டிருந்த இறகைக் காற்று உற்றுப்பார்த்தது. காற்று நின்றதும் உயரே பறந்து கொண்டிருந்த இறகு மெல்ல கீழே இறங்கியது. அப்படி இறங்கும் போது இறகின் கூர்முனை காற்றில் ஏதோ எழுதியது. என்ன எழுதியது?  காற்றுக்குத் தெரியவில்லை. காற்றுக்கு அதைத் தெரிந்து கொள்ளும் ஆவல் வந்தது. மறுபடியும் காற்று தன் மாயாஜாலத்தைக் காட்டியது. இன்னும் வேகமாகக் காற்று வீசியது. கீழே இறங்கிக் கொண்டிருந்த இறகு மறுபடியும் மேலே எழும்பியது. அருகில் இருந்த மரத்தின் மீது மோதியது. மரம் அசைந்தது. இறகு கிளைகளின் மீது தவழ்ந்தது.  கிளைகள் அசைந்தன.  இறகு இலைகளின் மீது அமர்ந்தது. இலைகள் அசைந்தன.  இப்போது பழுத்த இலைகள் கீழே கிளைகளில் இருந்து உதிரத் தொடங்கின. காற்று இன்னும் வேகமாக வீசியது.  மரத்திலிருந்த காய்ந்த குச்சிகள் ஒடிந்து விழுந்தன. இறகு இன்னும் உயரமாகப் பறந்தது. மரங்களின் இருந்த பறவைகளின் மீது இறகு மோதியது.  இறகு மோதியதும் சில பறவைகள் சிறகுகளை அசைத்து காற்றில் எழும்பின. மீண்டும் கிளைகளில் வந்தமர்ந்தன. இறகு மறுபடியும் பறந்தது.

சில பறவைகள் அப்படியே இறகைப் பார்த்துக் கொண்டே நின்றன. இறகு ஒரு தவிட்டுக்குருவியின் மீது அமர்ந்தது. அந்தத் தவிட்டுக்குருவி அன்புடன் அந்த இறகைப் பார்த்தது. நேற்றுவரை அதன் சிறகில் தான் அந்த இறகு இருந்தது. முட்டையில் இருந்து தவிட்டுக்குருவி பிறந்த போதே அந்த இறகு முளைத்து விட்டது. காடு, மேடு, வயல்வெளி, குன்று, குட்டை, மரங்கள், என்று தவிட்டுக்குருவி  பறக்கும்போது அந்த இறகு தான் காற்றைக் கிழித்தது. அப்போது அந்த இறகு தன் முழுச்சக்தியைக் கொடுத்து தவிட்டுக்குருவியைக் காற்றில் மிதக்க வைத்தது. இறகுக்கு வயதாகி விட்டது. அதன் அருகிலேயே புதிய இறகு முளைக்கத் தொடங்கி விட்டது.  வயதான இறகு தன் வாழ்க்கையை முடித்துக் கொண்டு உதிர்வதற்குத் தயாரானது. நேற்றும் அப்படித்தான் ஒரு காற்று வீசியது. தவிட்டுக்குருவியின் உடலில் காற்று மோதியதும் இறகு உதிர்ந்து கீழே மெல்ல இறங்கியது. அப்போது அந்த இறகு தான் வானில் பறந்த காலத்தை நினைத்துக் கொண்டது. இப்போது காற்று நின்று விட்டது. தவிட்டுக்குருவி தன் உடலைக் குலுக்கியது. ஒட்டிக் கொண்டிருந்த இறகு மறுபடியும் கீழே இறங்கியது. இறகு மெல்லக் கீழே இறங்குவதைத் தவிட்டுக்குருவி பார்த்துக் கொண்டிருந்தது. பூமியைத் தொட்டது இறகு. அந்த வழியே வந்த ஒரு குழந்தை அந்தச் சிறகைக் கையில் எடுத்தது. ” ஐய்.. இந்த இறகைப் பாரேன்.. எவ்வளவு அழகாக இருக்கு..”  என்று சொல்லிக் கொண்டே வாயின் அருகில் வைத்து பூ பூ பூ பூ என்று ஊதியது. குழந்தை ஊதிய காற்றில் கொஞ்சம் எழும்பிக் கீழே சுழன்று சுழன்று இறங்கியது. அந்த இறகு. குழந்தை தன் கைகளைத் தட்டிக் கொண்டே, “ குருவி பறக்குது.. குருவி பறக்குது.. “ என்று கத்தியது. அங்கே  ஒரு  குருவி  பறந்து  கொண்டு  இருந்தது.