districts

‘மா’ ஏற்றுமதி மண்டலம் கிருஷ்ணகிரி விவசாயிகள் கோரிக்கை

கிருஷ்ணகிரி, மார்ச் 2- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 40 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் மா சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். ஆண்டுதோறும் 4 லட்சம் மெட்ரிக் டன் மாம்பழங்கள் அறுவடை செய்யப்படுகின்றன. மா நுகர்வு, ஊறுகாய் தயாரிப்பு உள்ளிட்ட பயன்பாட்டுக்குப்போக, சுமார் 2 லட்சத்து 25 ஆயிரம் டன் பழங்கள் மாவட்டத்தில் உள்ள 27 மாங்கூழ் தொழிற்சாலைகளுக்குச் செல்கிறது. இங்கு தயாரிக்கப்படும் மாங்கூழ் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு இயற்கை இடர்பாடுகளால் மா விவசாயி கள் வருவாய் இழப்பைச் சந்தித்து வருகின்றனர். மேலும், மாங்கூழ் உற்பத்தியாளர்களும் பல்வேறு சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர். இதே நிலை தொடர்ந்தால் மா சாகுபடி பரப்பு குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, மா விவசாயத்தை காக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதுதொடர்பாக விவசாயிகள் கூறுகையில், “கிருஷ்ணகிரியை மையமாகக் கொண்டு மா ஏற்றுமதி மண்டலம் அமைக்க வேண்டும். மா மரங்களைத் தாக்கும், ‘த்ரிப்ஸ்’ நோயைக் கட்டுப்படுத்த ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும்.  மா விளைச்சல் அதிகரித்து, விலை சரியும் காலங்களில் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் விவசாயிகளுக்கு மானியமாக ஒரு கிலோவுக்கு ரூ.5 மானியமாக வழங்குகின்றனர். அதேபோல், தமிழ்நாடு அரசும் விவசாயிகளுக்கு மானியம் வழங்க வேண்டும். மாங்கூழ் உற்பத்தி செய்யும்போது கிடைக்கும் தோல், நார் உள்ளிட்ட கழிவுகளை வீணாக்காமல், அவற்றைக் கொண்டு சாண எரிவாயு உற்பத்தி செய்யும் நிலையம் அமைக்க வேண்டும்.  மா விவ சாயத்தைக் காக்க, அரசு புதிய திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும்” என்றும் கோரிக்கை விடுத்தனர்.