சிதம்பரம், ஏப். 9- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குமராட்சி ஒன்றிய நிர்வாகிகள் கட்சியின் மாவட்ட செயலாளர் கோ.மாதவன் தலை மையில் கீழ்வேளூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நாகைமாலியை சிதம்பரம் அருகே உள்ள கொள்ளிடத்தில் சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில், கொள்ளிடம் இடது கரை அணையையொட்டி வல்லம்படுகை, வேளக்குடி, மடத்தான் தோப்பு, வெங்காய தலைமேடு, கருப்பூர் திட்டுக்காட்டூர் உள்ளிட்ட சுமார் 25க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. இந்த கிராமங்கள் அனைத்தும் கொள்ளிடம் இடது கரையின் ஆறு மீட்டர் ஆழத்தில் உள்ளது. இந்த அணையின் சாலை பழுத டைந்து போக்குவரத்திற்கான தகுதியை இழந்ததால் இந்தசாலையில் இயங்கி வந்த அரசு மற்றும் தனியார் பேருந்துகள் சுமார் 5 ஆண்டுகளாக நின்று விட்டது. இந்தப்பகுதிகளில் இருந்து பள்ளி மாணவ மாணவிகள், நகர்புறத்திற்கு வேலைக்கு செல்பவர்கள், மருத்துவ மனைக்கு செல்லக்கூடியவர்கள் இதனால் பாதிக்கப்படுகின்றனர். இந்த இடது கரை சாலையை சரி செய்து போக்குவரத்து ஏற்பாடு செய்ய வேண்டும் என இந்த பகுதி மக்களை கொண்டு பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்றுள்ளது. அனால் சாலை இன்னும் சரிசெய்யவில்லை. இந்த பிரச்சினையை சட்டமன்றத்தில் எழுப்பி அல்லது முதல்வரின் கவனத்திற்கு எடுத்து சென்று கொள்ளிடம் இடதுகரை சாலையை சரிசெய்ய நடவடிக்கை வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டுள்ளனர் . இந்த சந்திப்பின் போது மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.ஜி. ரமேஷ்பாபு, குமராட்சி ஒன்றிய செயலாளர் மனோகரன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் மாசிலாமணி, புஷ்பராஜ். கடலூர் மாநகர செயலாளர் அமர்நாத், மாநகர்குழு உறுப்பினர் தமிழ்மணி உள்ளிட்ட கட்சியினர் கலந்து கொண்டனர்.