சென்னை, ஜூலை 3- தமிழக சட்டப்பேரவையில் நடந்த கேள்வி நேரத்தின் போது தமிழ் மொழியில் புதிய சொற்கள் உருவாக்கம் பணி தொடர்கிறதா? இது வரை உருவாக்கப் பட்ட, கண்டுப்பிடிக்கப்பட்ட தமிழ்ச் சொற்கள் எத்தனை? அறிவியல் சார்ந்த சொற்களை உருவாக்க எடுக்கப்பட்ட நடவ டிக்கை என்ன? என்று அதிமுக உறுப்பினர் செம்மலை கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் க. பாண்டியராஜன்,“படைப்பாளிகளாக இளைஞர்களை உருவாக்கும் திட்டமான சொற்குவை உருவாக்கப்பட்டுள்ளது. இதன்படி புதிய சொற்களை உருவாக்க ரூ. 1 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. ஏழு அகராதி திட்டங்களை ஒருங்கிணைத்து 4 லட்சம் வார்த்தைகள் இருப்பதை கண்டறிந்துள்ளோம்” என்றார். ஆங்கில அகராதியில் 1.71 லட்சம் வார்த்தைகள் மட்டுமே இடம் பெற்றுள்ளன. அதைவிட தனித்துவம் பெற்ற இரண்டு மடங்கு வார்த்தைகள் தமிழில் உள்ளது என்றும் அமைச்சர் கூறினார். கலை மற்றும் அறிவியல் சொற்கள் சொற்குவையில் வந்துவிடும். தமிழ் களஞ்சியம் இயற்கையாகவே வளர்ந்து வரும் என்ற நம்பிக்கையுள்ளது. இந்த சொற்குவை மிக விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும். தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலங்களில் தமிழை அலுவல் மொழியாக்க அரசு முயற்சிக்கும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.