districts

img

பாலாற்றில் வெள்ளம் ஆம்பூர், வாணியம்பாடி மக்களுக்கு எச்சரிக்கை

திருப்பத்தூர், ஜூலை 9- திருப்பத்தூர் பகுதியில் கனமழை காரணமாக சுற்றுலாத் தலமாக விளங்கும் ஜலகாம்பாறை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அங்கு சுற்றுலா பயணிகள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழக - ஆந்திர எல்லை வனப்பகுதியில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பாலாற்றில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு வெள்ளம் வந்தது. இதன் காரணமாக ஆந்திராவில் கட்டப்பட்டுள்ள 22 தடுப்பு அணைகள் நிரம்பின. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தமிழக - ஆந்திர எல்லை பகுதியில் கட்டப்பட்டுள்ள புல்லூர் தடுப்பணை கடந்த 4 நாட்களுக்கு முன்பு நிரம்பியது. இந்நிலையில் வியாழக்கிழமை ஆந்திர எல்லையோர நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் பலத்த மழை பெய்தது. இதனால் பாலாற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆந்திராவில் பாலாற்றில் கட்டப்பட்டுள்ள 22 தடுப்பணைகளையும் தாண்டி தமிழக எல்லையில் உள்ள புல்லூர் தடுப்பணைக்கு மீண்டும் அதிவேகத்தில் வெள்ளம் வந்தது. கடும்வெள்ளம் தடுப்பணையை தாண்டி 5 அடி உயரத்தில் தமிழகத்திற்குள் பாய்ந்தோடி வருகிறது. அந்த பகுதியில் கட்டப்பட்டுள்ள கனகநாச்சியம்மன் கோவில் வரை இரு கரைகளையும் தொட்டபடி பாலாற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. மேலும் தமிழக எல்லையான திருப்பத்தூர் மாவட்டம் திம்மாம்பேட்டை, ஆவாரம்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை இரவு கனமழை பெய்தது. இதன் காரணமாக திம்மாம்பேட்டை, நாராயணபுரம் ஆகிய இடங்களில் உள்ள பாலாற்றின் கிளை நதிகளில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து வந்தது.

இந்த வெள்ளம் பாலாற்றில் கலந்து ஓடுகிறது. காட்மாறி, மன்னார் பகுதிகளில் கட்டப்பட்டுள்ள பாலத்திற்கு மேல் வெள்ளம் செல்கிறது. இதனால் ஆவாரங்குப்பம், அம்பலூர், கொடையாஞ்சி உள்ளிட்ட பகுதியில் பாலாற்றில் இரு கரைகளை தொட்டப்படி வெள்ளம் சீறிப்பாய்ந்து செல்கிறது. அம்பலூர் தரைப்பாலத்தின் மீது வெள்ளம் பாய்ந்து வருவதை அப்பகுதி பொதுமக்கள் திரண்டு வந்து வேடிக்கை பார்த்தனர். வெள்ளிக்கிழமை காலை பாலாற்றில் வெள்ளம் வாணியம்பாடியை கடந்து வந்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து கனமழை மற்றும் நீர்வரத்து ஏற்பட்டால் ஓரிரு நாட்களில் பாலாற்று வெள்ளம் வேலூரை கடந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாலாற்றில் இரு கரைகளையும் தொட்டபடி வெள்ளம் சென்று கொண்டிருப்பதால் வாணியம்பாடி, ஆம்பூர் மற்றும் கரையோரத்தில் உள்ள கிராம பொதுமக்களுக்கு திருப்பத்தூர், வேலூர் மாவட்ட நிர்வாகம், பொதுமக்கள் யாரும் தண்ணீரில் இறங்க வேண்டாம். ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் பாலாற்றில் பாய்ந்து வரும் வெள்ள நீரை வீணாக்காமல் ஏரிகளுக்கு திருப்பிவிடும் பணியில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். திருப்பத்தூர் பகுதியில் கனமழை காரணமாக சுற்றுலாத் தலமாக விளங்கும் ஜலகாம்பாறை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அங்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.