விழுப்புரம், டிச.15- விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையாலும், திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனூர் அணையிலிருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதாலும், தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தின் வழியாக ஓடும் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் ஆற்றின்கிளை ஆறுகளான பம்பை ஆறு, மலட்டாறு, நரியாறுகளிலும் வெள்ளம் பெருக் கெடுத்து ஓடுகிறது. அதேபோல் ஆற்றில் இருந்து பிரிந்து செல்லும் வாய்க்காலிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில், பெரும்பாக்கம்- ஆரியூர் இடையே உள்ள வாய்க்கால் சிறிய பாலத்தில் மண் அரிப்பு ஏற்பட்டு, வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதன் காரணமாக பெரும்பாக்கம்- ஆரியூர் இடையேயான கிராம சாலை துண்டிக்கப்பட்டது. இதனால் ஆரியூர், சாணிமேடு, வெங்கமூர், எடப்பாளையம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வாகன போக்குவரத்து தடைபட்டது. இதனால் அக்கிராம மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு கூட விழுப்புரம் வர முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் விழுப்புரத்தில் இருந்து ஆரியூர் வழியாக ஏழுசெம்பொன், சாணிமேடு உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்லக்கூடிய அரசு மற்றும் தனியார் பேருந்துகளும் இயக்கப்படாததால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர் களும், கூலி வேலைக்கு செல்பவர்களும் அவதிப்படுகின்றனர். எனவே அங்கு தரமான புதிய பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.